இலங்கை இராணுவ பயிற்சி விவகாரம்! இந்திய பாராளுமன்றம் 7வது நாளாக இன்றும் முடக்கம்
நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக கோரி பிஜேபி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் 7வது நாளாக பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடங்கின.இலங்கை பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு பயிற்சி அளிப்பதை கண்டித்து அதிமுக சார்பில் மக்களவையில் கோஷம் எழுப்பப்பட்டது.
இன்று மக்களவை கூடியதும் சபாநாயகர் மீராகுமார் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முயன்றார்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் பலமுறை கேட்டுக்கொண்டும் மத்திய அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து ஊட்டியில் இலங்கை படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதே கோரிக்கைக்காக திமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
உறுப்பினர்களின் கூச்சல், குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.