புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2012


டெசோ தீர்மான அறிக்கை! பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பிப்பு
பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.
திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.
சந்திப்பின் போது, கடந்த 12.8.2012 டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் - தீர்மானங்களையும் வழங்கினார்கள்.
பிரதமர், இக்கடிதத்தை படித்துவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார் என்றும், அதோடு, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்ததாகவும், இக்கடிதம் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும், மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்சினையில், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்ததாகவும் சந்திப்புக்குப் பின்னர் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, மேலும், கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் பிரதமரிடம் அளித்தார்கள்.
அதில், இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களும், வெளியில் வாழும் தமிழர்களும், அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
பல குடும்பங்கள் மரத்துக்கு அடியில் வாழ்கின்றனர்.
தமிழர்கள் வேலை வாய்ப்பின்றி அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொள்ள இயலாமல் தவிக்கின்றனர். அங்குள்ள சலூன் கடைகள் கூட இராணுவ வசமாகியுள்ளது.
தமிழர்கள் வைத்திருந்த பெட்டிக் கடைகள் கூட தற்போது ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் இராணுவ வீரர்கள் ஆக்ரமித்துவிட்டனர்.
அவற்றை தமிழர்கள் கேட்டாலும் அதனை விட்டு வெளியேற இராணுவத்தினர் மறுக்கின்றனர்.
முகாம்களில் இருந்து வெளியே வந்துள்ள தமிழ் மக்கள், கிராமத்துக்குள்ளேயும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.
எனவே இதுபோன்ற அவலநிலைக்குள்ளாகியிருக்கும் தமிழர்களை காக்க வேண்டியது நமது கடமையாகிறது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

ad

ad