புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


விகடன் 
நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு அனுமதி கொடுத்து, பொலிஸ் அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் போராடி,...
...இடம் கிடைக்காவிட்டால் அறிவாலயத்தில் நடத்துவேன் என்று சமாதானம் அடைந்து... கடைசியில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தே முடிந்து விட்டது கருணாநிதி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு.
ஒவ்வொருவராகக் கழன்று கொண்டனர்
உலகம் முழுக்க இருந்து இந்த மாநாட்டுக்கு வருகிறார்கள் என்று முதலில் அறிவித்தார் கருணாநிதி. அகில இந்தியத் தலைவர்கள் வருவதாகவும் சொன்னார். ஈழத்து தமிழ் எம்.பி-க்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்றார்.
ஆனால் கடைசியில், வந்தவர்கள் வெகு சிலர்தான். மாநாட்டில் பங்கேற்கும் வி.ஐ.பி-களின் பட்டியலை தி.மு.க. முன்னரே அறிவித்து இருந்தது. வருவதாக ஒப்புக்கொண்ட சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய நால்வரில், பஸ்வான் மட்டும்தான் வந்தார். சரத்பவாரும் பரூக் அப்துல்லாவும் மத்திய அமைச்சர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த மாநாடு நடப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, அவர்கள் இருவரையும் காங்கிரஸ் மேலிடம்தான் போகக் கூடாது என்று தடுத்துவிட்டது என்கின்றன டெல்லித் தகவல்கள்.
சமீபகாலமாக டெல்லித் தலைமையுடன் கோபம்கொண்டுள்ள சரத்பவார் கூட இந்த மாநாட்டுக்கு வராதது கருணாநிதியை வருத்தம் அடைய வைத்தது. இது சில நாட்களுக்கு முன்னரே கருணாநிதிக்குத் தெரியவந்ததும், மாநாட்டுக்கு வருபவர்களது பெயர்களை மறைக்க ஆரம்பித்தனர்.
அதேநேரம், மாநாட்டுக்கு வர இருந்த சிலருக்கு விசா தர மத்திய அரசு மறுப்பதாகவும் கருணாநிதிக்குத் தகவல் வந்தது. இதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போதே, மத்திய வெளியுறவுத் துறை அனுப்பிய கடிதம் தி.மு.க. பிரமுகர் ஹசன் முகமது ஜின்னா பெயருக்கு வந்தது. அதில் 'ஈழம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இப்படி ஓர் இடியை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை.
எரிச்சலைக் கொடுத்த 'ஈழம்’
தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி டெசோ மாநாடு என்று தி.மு.க. ஆரம்பத்தில் சொல்லத் தொடங்கியதுமே, ப.சிதம்பரத்தை அனுப்பி மத்திய அரசு ஆப் பண்ணியது. வேறுவழி இல்லாமல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
அதற்குப்பிறகும் நெருக்கடிகள் தொடரவே, மத்திய அரசுக்கு நெருக்கடிகளை உண்டாக்கக் கூடாது என்பதற்காக எவ்வளவோ இறங்கிப் போயிருக்கிறோம். அவர்கள் நமக்காக கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார்களா?’ என்று கோபத்தின் உச்சிக்கே போனாராம் கருணாநிதி.
மாநாட்டுக்கு வர சம்மதித்தவர்களுக்கு விசா தர மாட்டார்களாம். ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதாம். பிறகு எதற்கு நாம் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கொந்தளித்த கருணாநிதி, டி.ஆர்.பாலுவை அழைத்து பிரதமருக்குப் போன் போடச் சொன்னார்.
நமது கூட்டணி அமைந்த 2004 முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய கட்சியாக தி.மு.க. இருந்திருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் மீது விழும் விமர்சனங்களைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டு பதில் கொடுத்திருக்கிறோம்.
மம்தா போல இந்த ஆட்சிக்கு நாங்கள் இடையூறு செய்திருக்கிறோமா? இலங்கையில் நடந்த இறுதிப்போரில் காங்கிரஸ் விமர்சனத்துக்கு உள்ளானதைவிட, நாங்கள் உலகத் தமிழர்களிடம் காயப்பட்டதுதான் அதிகம்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அதில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மாநாட்டில் என்னதான் பேச முடியும்?
தமிழ்நாட்டில் பிரதான கட்சியான நாங்கள் அரசியல் நடத்த வேண்டாமா?'' என்று மன்மோகன் சிங்கிடம் கர்ஜித்தார் கருணாநிதி.
அப்போது பிரதமர், 'உடனடியாக நான் கவனிக்கிறேன்’ என்று மையமாகச் சொன்னாராம். தொடர்ந்து பேச மனம் இல்லாதவராக டி.ஆர். பாலுவிடம் ரிசீவரைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. அவரும் தன் பங்குக்கு வருத்தங்களைச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் 'ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்’ என்ற அறிவிப்பு மத்திய அரசின் உள்துறையில் இருந்து வெளியானது.
இதே நேரத்தில், மாநாட்டுக்கு சென்னை பொலிஸ் தடை விதித்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. தி.மு.க. வக்கீல் வில்சனின் அலுவலகத்துக்கு, டெல்லியில் இருந்து அந்தக் கடிதத்தை பக்ஸில் வாங்கி, கோர்ட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் கொடுத்தனர்.
டெல்லியில் இருந்து இப்படி ஓர் கடிதம் கிடைத்தாலும் கருணாநிதி மகிழ்ச்சி அடையவில்லை. 'சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம கெஞ்சிக்கிட்டு இருக்கணுமாய்யா’ என்று விரக்தியில் புலம்பியபடிதான் மாநாட்டுக்கு முந்தைய நாள் வரை இருந்துள்ளார்.
அவர் பெரிதும் எதிர்பார்த்தது இலங்கைத் தமிழ் எம்.பி-க்களை. அவர்கள் அனைவருக்கும் தி.மு.க. வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார். அவர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, கருணாநிதியும் செல்போனில் பேசி இருக்கிறார்.
யாருமே தமிழகம் செல்லக் கூடாது என்று இலங்கை அரசாங்கம் சொன்னாலும் அதைமீறி தமிழ் எம்.பி-க்கள் வருவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்த்தார். ஆனால், அவர்கள் வரவில்லை. அதைவிட, 'எங்களால் வர முடியாத சூழ்நிலை இருக்கிறது’ என்று முன்னதாகச் சொல்லவும் இல்லை என்பதுதான் கருணாநிதிக்குக் கூடுதல் வருத்தம்.
உளவுத்துறை சொன்ன ஒரு வரித் தகவல்
எப்படியாவது மாநாட்டை நடத்தி முடித்தால் போதும் என்ற முடிவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கருணாநிதி வந்தார். கோர்ட் அனுமதி கொடுத்தால் வை.எம்.சி.ஏ-வில் நடத்துவது, இல்லை என்றால் அறிவாலயத்தில் நடத்துவது என்று முடிவு செய்திருந்தார்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்தது. அந்த ஹோட்டலுக்குள்ளும் தமிழக அரசின் உளவுத்துறை பொலிஸும் வீடியோ கிராபரும் நுழைந்ததுதான் ஆச்சர்யம். வெளியே மத்திய அரசின் ஐ.பி. ஆட்கள் நிமிடத்துக்கு நிமிடம் தகவல்களை டெல்லிக்கு அப்டேட் செய்துகொண்டு இருந்தனர்.
இந்த ஆய்வரங்கத்தில்தான் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டன. 'தமிழீழம் கேட்கும் தீர்மானம் இல்லை சார்’ என்று உளவுத் துறையினர் மேலிடத்துக்குத் தகவல் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
மாலையில் நடந்த மாநாட்டுப் பந்தலுக்குள் காக்கிச் சட்டைகள் யாருமே இல்லை.
வெடி வைக்கவா போகிறோம்?
ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைப்பது கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கான மாநாட்டை நடத்துவதே கடினம் என்பது இப்போதுதான் புரிகிறது. இந்த மாநாடு முடிந்த பிறகும், தடை போட முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
நாங்கள் என்ன கண்ணி வெடி வைக்கவா இங்கே கூடியிருக்கிறோம். கண்ணீர்விடவே சேர்ந்திருக்கிறோம். 108 அம்புலன்ஸைக் கொண்டு வந்த, தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றிய கலைஞரா இடைஞ்சல் தருவார்?
போராட்டத்தின் களத்தை மாற்றி இருக்கிறோம். இந்த மாநாடு முடிவு அல்ல. ஈழத் தமிழரின் துயர் துடைக்கும் தொடக்கம் என்று சுப.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
ஈழத் தமிழர்களின் துயர் தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் என்றுதான் நினைக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால்தான் ஆயுதம் ஏந்தினார்கள் என்பது தமிழகத்தைத் தாண்டி வெளியே தெரியாமலே போய்விட்டது.
இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று அலற வைத்தார் ராம்விலாஸ் பஸ்வான்.
தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறிப் பேசினார் தொல்.திருமாவளவன். ராஜபக்சவின் இடுப்பு எலும்பை உடைக்கும் வகையில் இந்த மாநாட்டை கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஈழத்துக்காக ஆரம்பத்தில் போராடிய ஒற்றைக் கட்சி தி.மு.க-தான். இப்போது தமிழ் ஈழம் வேண்டாம் என்று கலைஞர் சொல்வது ஓர் உத்தி. இலங்கையில் இருப்பவர்கள் பாதுகாப்பட வேண்டும் என்பதற்காக அதைச் சொன்னார்.
ஈழத் தமிழர் விஷயத்தை உலக நாடுகள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. கலைஞர் வாள் ஏந்தும் நேரம் வந்து விட்டது'' என்று நரம்பு புடைக்கப் பேசினார். தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்தது இவரது பேச்சு.
இறுதியில் கருணாநிதி, ''ஈழத் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். முதலில் அங்கே காயம்பட்டுக் கிடப்பவர்களின் காயத்தை ஆற்றுவதற்கான முதலுதவியைச் செய்ய வேண்டும்.
டெசோ மாநாட்டின் மூலம் அதை செய்யத் தொடங்கியிருக்கிறோம். என் வாழ்நாளில் நிறைவேறாத கனவு... நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு நிச்சயம் போராடுவேன்'' என்று பேசி முடித்தார்.
முள்ளிவாய்க்காலில் சரிந்த தனது இமேஜை தூக்கி நிறுத்த கருணாநிதி முயற்சித்தார்... அது முடிய வில்லை!
10 ஆயிரம் பொய்... 1 லட்சம் பொய்...
அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் பொய் சொல்லும் என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு.
மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன், 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார்.
ஆனால், மாநாடு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், 'ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று அவர்களது அதிகாரபூர்வப் பத்திரிகையில் வெளியிடுகிறார்கள்.
ஒவ்வொரு ஊரில் இருந்தும் இத்தனை வேன், இத்தனை பஸ் என்று தீர்மானம் போடுகிறார்கள் என்று கிடுக்கிப்பிடி போட்டார். நாளிதழ்களில் வருவதை எல்லாம் ஆதாரமாகச் சொல்ல முடியாது என்று தி.மு.க. வக்கீல்கள் வாதமாக வைத்தார்கள். இதைப் பார்க்கும்போது நமக்குத்தான் தலை சுத்துகிறது!
கருணாநிதி படம் எரிப்பு
டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முன், 'தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்’ என்ற இயக்கம் குமுறி உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்த் தேசக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் பொம்மையை திங்கட்கிழமை காலையில் தீயிட்டு எரித்து உள்ளது இந்த அமைப்பு.
அங்கு இந்திய அரசைக் கண்டித்தும், ஈழக் கோரிக்கையை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அங்கு ஏந்தப்பட்ட பதாகைகளில், 'இந்திய அரசைக் கண்டிக்கிறோம். ஈழ ஆதரவு மீண்டும் ரத்தஆறு ஓடுவதற்கான கோரிக்கை’ என்ற வரிகள் எழுதப்பட்டு இருந்தன.
இலங்கை தலைவர்கள் ஏன் வரவில்லை?
இலங்கைத் தமிழ்த் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், யோகேஸ்வரன், சரவண பவன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்வதாக கருணாநிதி அறிவித்து இருந்தார்.
இவர்களில் யாருமே வரவில்லை. இலங்கை நவ சமாசமாஜ கட்சித் தலைவர் விக்கிரமபாகு கர்ணரத்தின மட்டுமே வந்திருந்தார். இவர் பிறப்பால் சிங்களவர்!
வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு ஏன் வரவில்லை? என்று அவர்களிடம் கேட்டோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,
2009 இறுதிக் கட்டப் போரின்போது தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் போராட்டம் அழிக்கப்படுவதற்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் துணையாக நின்றவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர் நடத்தும் மாநாடாக இருந்தாலும் அதில் பங்குகொண்டு தமிழ் மக்கள் விடிவுக்கான வழியைக் கொண்டுவரலாம் என முயற்சித்தோம்.
ஆனால், எங்களுக்கு இந்திய அரசு விசா கொடுக்கவே இல்லை. இந்திய அரசைக் காரணம் காட்டியே இலங்கை அரசும் விசாவை நிராகரித்தது. இறுதி நேரத்தில் விசுவலிங்கம் மணிவண்ணுக்கு விசா அளிக்கப்பட்டது. ஆனால், விசா அளித்த நேரத்தில் புறப்படுவதற்குள் மாநாடே முடிந்து விடும் என்பதால் அவரும் வரவில்லை!'' என்றார்.
டெலோ தலைவரான செல்வம் அடைக்கலநாதனிடம் பேசினோம்.
கருணாநிதி எங்கள் மக்களின் பிரச்சினைக்குக் குரல் கொடுத்தவராக இருந்தாலும் - அழிவுக்கும் காரணமாக இருந்து உள்ளார். அவர் நினைத்திருந்தால் மக்கள் சக்தியை உருவாக்கி அழிவைத் தடுத்திருக்கலாம்.
தமிழக தலைவர்களும், மக்களும், புலம்பெயர் மக்களும் ஓர் அணியில் நின்றால் மட்டுமே இலங்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.
தமிழகம் சென்றால் மீண்டும் கொழும்புக்குள் வர விட மாட்டோம்’ என்று மிரட்டப்பட்டதுதான், இவர்கள் வராததற்குக் காரணம் என்பதே பொதுவான கருத்து.

ad

ad