சிறிலங்காக் கடற்படை வட பகுதியில் வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் வன்னியில் முன்னர் கடற்புலிகளின் தளங்கள் விளங்கிய பூநகரியிலுள்ள கல்முனை என்ற இடத்திலும் சுண்டிக்குளத்திலுமே இவ்வாறு புதிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த இரு தளங்களையும் கடந்த முதலாம் திகதி சிறிலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இரு இடங்களும் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளால் பாரிய தளங்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், போர் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் சிறிலங்கா அரசாங்கம் நாட்டி;ன பாதுகாப்பிற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டு இராணுவத்திற்காக பாரிய படைத்தளங்கள் மற்றும் முகாம்களையும் அமைத்து வருகிறது. அத்துடன் அவற்றிற்காக பொது மக்களின் காணிகளையும் அபகரித்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மாதகல் சம்பில்துறையில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.