என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி : நடிகர் சிரஞ்சீவி
ஆந்திர மாநிலத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்பட 5 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம், ’’நான் எனது கட்சியை காங்கிரசில் இணைக்கும் போது கட்சி தலைமையிடம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதேபோல் அவர்களும் எந்த உறுதி மொழியும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் அரசை காப்பாற்றவே நான் காங்கிரசில் இணைந்தேன். காங்கிரஸ் தலைமை என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி வழங்கியுள்ளது.
இந்த பதவியில் உண்மையாக இருப்பேன் என்று கருதி இந்த பதவியை கொடுத்துள்ளது. இதற்காக அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, வயலார் ரவி, குலாப் நபி ஆசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’என்று கூறினார்.