இளையராஜா
இசை நிகழ்வும் மாவீரர்தின தமிழர் தேசிய நிகழ்வும் - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை.
இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் விளக்க அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
அதன் முழுவிபரம் கீழே தரப்படுகிறது..
கனடியத் தமிழர் பேரவை
29-10-12
------------------------
அன்பான தமிழ் மக்களே!
கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.
ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.
ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
நன்றி
மேலதிக தொடர்புகளுக்கு
கனடிய தமிழர் பேரவை
(416) 240-0078