மதுரையில் கிரானைட் மோசடி தொடர்பாக கீழவளவு போலீசார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்யவும் போலீசார் தேடி வந்தனர். இநத நிலையில் துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவரை கைது செய்ய அவரது மனைவி அனுஷா உள்பட உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் துரை தயாநிதியை கைது செய்ய பிடிவாரன்ட் கேட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுரை கீழவளவு போலீசார் இன்று (08.10.2012) மனு செய்தனர். மேலூர் குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் ஜெயக்குமாரிடம், மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை இன்றே விசாரணைக்கு வந்தது.
துரை தயாநிதி தரப்பு வழக்கறிஞர்கள் கோர்டில் ஆஜராகி வாதாடுகையில், தங்கள் தரப்பிற்கு எந்தவித நோட்டீசும் தராமல், வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
இதையடுத்து இன்று காலையில் போடப்பட்ட பிடிவாரன்டை, துரை தயாநிதி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை ரத்து செய்ததுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 10.10.2012க்கு தள்ளி வைத்தார் நீதிபதி. அன்றைய தினம் துரை தயாநிதி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.