வட மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று! புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி படுதோல்வி!
கடந்த மாதம் தேர்தல் இடம்பெற்று புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண சபையின் புதிய தலைவர் தெரிவில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வடமத்திய மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது.
இந்த அமர்வின்போது, சபைக்கான புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டதையடுத்து, சபைத் தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியினர் அமரகீர்த்தி அத்துகோரளவை முன்மொழிந்தனர்.
அதேவேளை, எதிர்க்கட்சியின் சார்பில் பீ.எம்.சிறிபாலவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதன் பின்னர், நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 32 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அத்துகோரளவிற்கு 10 வாக்குகளும், எதிர்க்கட்சியினால் நிறுத்தப்பட்ட சிறிபாலவுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.
இதனையடுத்து 11 மேலதிக வாக்குகளை பெற்ற சிறிபால சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். சபையின் பிரதித் தலைவராக ஜயந்த மாரசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
வடமத்திய மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு 20 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 13 ஆசனங்களும் உள்ளன.