இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வருகின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்கு ஈழ ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கனடா வாழ் தமிழர்கள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
’’நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் நிகழ்ச்சி வேண்டாம். வேறு ஒரு மாதத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனாலும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை டிரினிட்டி ஈவெண்ட்ஸ் கவனித்து வருகிறது. அதற்கான வேலைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.
திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளார்கள். இது வரை 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்னும் இரண்டு தினங்களில் விற்பனையாகும். இந்த அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, எப்படி நிகழ்ச்சி ரத்தாகும்?’’ என்கிறார்கள் சில கனடா தமிழர்கள்.
மேலும் அவர்கள், ’’நவம்பர் மாதத்தில் மூன்று தினங்கள்தான் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் அல்ல. அதனால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை’’ என்கிறார்கள்.