இலங்கை இராணுவத்துக்கு 109 தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு தற்போது கிளிநொச்சி - பாரதிபுரத்தில் இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இராணுவத்தில் நியமனங்களைப் பெறவென வட மாகாணத்தில் உள்ள 100 தமிழ் பெண்கள் தமது பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

35ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பளம், மேலதிக கொடுப்பனவு, இலவச சீருடை, இலவச போக்குவரத்து வசதி, திருமணத்தின் பின் விடுமுறை சலுகை, பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் இணைத்தல், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்படும் என குறித்த 109 தமிழ் பெண்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்பெண்களுக்கு இராணுவ ஆயுதப்பயிற்சி வழங்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள இவர்கள், இராணுவ மகளிர் படையின் 6 ஆவது படையணியின் கீழ் தொழிற்படுவர்.

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் கடந்த வாரங்களில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி 109 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.