13வது திருத்தத்தை ரத்துச்செய்ய முயன்றால் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டி வரும்!- ஸ்ரீ.மு.கா. ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தீர்க்கமான முடிவுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என்று தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளோம் என்று அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி பா.உ. தெரிவித்தார்.
இதற்கான தீர்மானம் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி முக்கியமான மூன்று விடயங்கள் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்தது.
இதன்போது 13 வது திருத்தச்சட்டம், திவிநெகும சட்டமூலம் மற்றும் பிரதம நீதியரசர் விவகாரம் என்பவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக மாகாணசபைகளில் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேபோன்று 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்ய வேண்டும். மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் கருத்துக்களை பரப்பி வருகின்றது.
இதனை வன்மையாக கண்டிப்பது மாத்திரமன்றி 13வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து ரத்துச் செய்யும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும்.
ஏனென்றால் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
இதனை இல்லாதொழிப்பது என்பது அனுமதிக்கக் கூடிய விடயமல்ல. முஸ்லிம் சமூகத்தின் வெறுப்புடனும், பல்வேறு தரப்புகளின் சந்தேகத்துடனும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துள்ளது.
இதனால் பல தரப்புகளின் ஆதரவுகளைக் கூட முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ளது.
அகவே 13வது திருத்தச் சட்ட விடயத்தில் பாதகமான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கையினை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்போம் என்றார்