இலங்கை விவகாரம்! ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி!
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமைகள் பேரவையில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.
ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பின் பிரதமரை, கனிமொழி சந்தித்திருக்கலாம்.
ஐ.நா., சபையில், ஸ்டாலின் மனு கொடுக்கும் போது, கனிமொழி, பிரதமரிடம் கடிதம் கொடுப்பது, போட்டா போட்டியாக இருக்கிறது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா., சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழியும் வலியுறுத்துவது கட்சிக்கும், தனக்கும் கிடைக்கும் அரசியல் லாபம் என, கருணாநிதி கருதுகிறார்.
தி.மு.க., ஆட்சியில் இலங்கையில் போர் நடந்தது. அப்போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர்.
அந்த குற்றச்சாட்டை களைவதற்கும், இலங்கை தமிழர்களுக்காக ஐ.நா., சபையில் குரல் கொடுத்த முதல் அரசியல் கட்சி தி.மு.க., என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்ளவும் கருணாநிதி விரும்புகிறார். அதே நேரத்தில், ஸ்டாலினை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க, கனிமொழியை களமிறக்கி விட்டுள்ளார்.