புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2012


மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. 
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

நா.க.த.அரசின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை சர்வதேசத்தினை நோக்கி வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய அமர்வில் பல நாடுகள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரவித்திருந்தன. இதற்கு பின்னர், முன்னரும் மூடிய கதவுகளுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள்தான், யாவற்றையுமே தீர்மானிக்கப் போகின்றன என அமர்வில் பங்கெடுத்திருந்த நா.க.த.அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாசுகி தங்கராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையின் நிறைவேற்றுக்காலம் இலங்கைக்கு 2013 மார்ச் மாதம் ஆகவுள்ள நிலையில், அந்தக் காலம் வரைக்கும் சர்வதேசத்தினை ஏமாற்றும் இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தினை, சிறிலங்கா கையாள்வதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் வாசுகி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

ஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.

இதன்போது, மனிதஉரிமைகளை மேம்படுத்தவும், மனிதஉரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்நிலையில் 2008ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைவரம் விவாததற்திற்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் அதற்கு பிந்தியநிலை முக்கியமானதாக கவனிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் சிறிலங்கா குறித்த விவாதம் பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6:30 மணிவரை இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 உறுப்பு நாடுகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு வினர் சபையில் பிரசன்னமாகியிருந்ததோடு சிங்களதேசத்தின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோர்களை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, உள்நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டு சிறிலங்கா அரச பிரதிநிதிகள் தங்களை நியாயப்படுத்த முனைந்திருந்தனர்.


அமெரிக்காவின் கருத்து :
இலங்கை அரசு தான் ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத்தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ அது முன்வைக்கவில்லை என அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.

முன்பு போர் நடந்த இடங்களில் நடக்கும் இராணுவ மயமாக்கல் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். காணமல் போவது குறித்து பேச்சுரிமை பாதிப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். சிறிலங்கா அரசு படிப்பினைக் குழுவின் ஆக்கபூர்வ பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். அரசு சாரா நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை சிவிலியன்களுக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்து அமைந்திருந்தது.

இந்தியாவின் கருத்து : இலங்கை அரசாங்கம் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதோடு அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியிருந்தது.

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து தனது கவலையினைத் தெரிவித்திருந்த இந்தியா சுதந்திரமான முறையில் வடக்கில் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமென வலியுறுத்தியிருந்தது.

பிரான்சின் கருத்து :
2006ம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரென்சு தொண்டமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களுக்கான நீதிவிசாரணை குறித்து கடுமையான நிலைப்பாட்டினைத் பிரான்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

மூன்றாம் உலக சிறிய நாடுகள் பலவும் சிறிலங்காவுக்கு பாராட்டுபத்திரம் வாசித்திருந்த நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அங்கத்துவம் பெறவேண்டும் மற்றும் சர்தேச சுயாதீன விசாரணை போன்ற பல விடயங்கள் சில நாடுகளினால் முன்வைக்கப்பட்டிருந்தமை, சிறிலங்காவுக்கு கசப்பானதகவே அமைந்திருக்கும் என ஜெனீவா சென்றிருக்கும் நா.க.த.அரசின் அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வில் உறுப்பு நாடுகளினால் முன்வைக்கபட்ட கருத்துக்களின் அடிப்படையில் , இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து அறிக்கையொன்றினை தயாரித்து பரிந்துரைத் தீர்மானத்தினை எதிர்வரும் 5ம் நாள் திங்கட்கிழமை சபையில் சமர்ப்பிக்கும்.

சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் இந்த பரிந்துரைத் தீர்மானத்தினை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சூழலுக்குள் சிறிலங்கா அகப்படுமா என்பதுதான் இன்றைய பலரது கேள்வியாகவுள்ளது.

ad

ad