புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012



கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை!
சென்னை கோட்டூர்புரம் அடையாறு பாலத்திற்கு விலை உயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று இன்று (20.12.2012) மதியம் 12.45 மணி அளவில் வந்தது. அந்த கார் திடீரென அடையாறு பாலத்தில் நின்றது. 

காரில் இருந்து அவசர அவசரமாக சென்ற ஒருவர் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதிக்க முயற்சி செய்தார். அதனை காரில் இருந்த மற்றொருவர் தடுக்க முயற்சித்தார். அவரை கீழே தள்ளிவிட்டு அந்த நபர் குதித்துவிட்டார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆற்றில் குதித்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் அவரை மீட்க முடிந்தது. அவர் யார் என்று விசாரணை நடத்தியபோது, பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்திய ஸ்ரீயின் கணவர் மகாதேவன் என அடையாளம் தெரிந்தது. 
இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மகாதேவன் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
மகாதேவன் கோட்டூர்புரத்தில் வெள்ளையன் தெருவீல் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடைக்கு செல்வதற்காக காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் ஓட்டியுள்ளார். அடையாறு பாலத்தில் கார் வந்தபோது செல்போனில் மகாதேவன் யாருடனோ கோபமாக பேசினார் என்றும், பின்னர் காரை நிறுத்தச் சொல்லி சாவியை காரில் இருந்து பிடிங்கிக்கொண்டு ஆற்றில் குதிக்க முயற்சித்தபோது டிரைவர் தடுக்க முயன்றார் என்றும், டிரைவரை கீழே தள்ளிவிட்டு பின்னர் குதித்தார் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இச்சம்பவம் குறித்து போலீசார் நித்யஸ்ரீயின் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். 
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மகாதேவன் தேவையில்லாமல் கோபம் கொள்வதும், நடவடிக்கையில் சற்று மாற்றம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
உயிரிழந்த மகாதேவன் சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள இன்ஜினியர்ஸ் இன்டியா என்ற மத்திய அரசு நிறுவனத்தில் இன்ஜீனியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய தாயார் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அது முதல் மகாதேவன் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
பிரபல கர்நாடக இசைப்பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்திதான் நித்யஸ்ரீ. இவருடைய கணவர் மகாதேவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இசைக்கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad