புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன? virakeari


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.



காலம் காலமாக என்னதான் விழிப்புணர்வூட்டினாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு மூலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன. காம ஆசையை சிறார்களிடம் காட்ட முயற்சிக்கும் காம அரக்கர்களிடமிருந்தே சிறார்களை நாமே பாதுகாக்க வேண்டும்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியன ஒருபுறம் வளர்ந்துகொண்டிருக்க சிறுவர் துஷ்பிரயோகமானது அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.

இதை எண்ணி வருத்தப்படுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும் என்பார்கள். சம்பவம் இடம்பெற்று ஓரிரு நாட்கள் அழுது புலம்புவதைவிட காம அரக்கர்களின் கண்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே புத்திசாலித்தனமாகும்.


யுனிசெப் மற்றும் புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதியன்று தெரிவித்திருந்தார். மேலும் இவ்வருடத்தில் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 4,ஆயிரத்து 414 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. இளம் வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான எண்ணிக்கை புள்ளிவிபரங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்த அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் இருக்கின்றது. உணர்வு, உள ரீதியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுவர்கள் உள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முக்கிய காரணியாக தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லவது. தனது பிள்ளையின் எதிர்காலம், வறுமை, குடும்ப சுமை என பல சுமைகளுடனும் கனவுகளுடனும் இலக்குகளுடனும் தனது பிள்ளையை தந்தையிடமோ, உறவினர்களிடமோ விட்டுச் செல்கின்றனர். இருவருடங்களுக்குப்பிறகோ அல்ல சில வருடங்கள் கழிந்தோ வீட்டுக்கு திரும்பி வரும் தாய்மார் தனது பிள்ளை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது என அறியவந்தால் அந்த சோகத்தை நினைத்துதான் பார்க்க முடியுமா?.

ஆம் இதுதான் உண்மை. அதாவது தனது பிள்ளைகளை உறவினர்களிடமோ தந்தையிடமோ பாதுகாப்பாக இருப்பார்கள் என எண்ணி விட்டு வெளிநாடுகளுக்கு தாய்மார்கள் சென்று விடுகின்றனர். இதற்கு பின்னர் சிறிது காலத்தில் பிள்ளைகள் பெற்ற தந்தையினாலும், சித்தப்பாவினாலும் மாமாவாலும் தாத்தாவினாலும் பக்கத்து வீட்டுக்கரராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு பல கசப்பான விடயங்கள் இடம்பெற்றமை நாம் அறிந்ததே.

சிலர் தனது பிள்ளைக்காகவே உழைத்து பாழாய்ப் போகின்றனர். ஆனால் போதைக்கும் காமத்துக்கும் மாத்திரம் அடிமையாகிய சில நயவஞ்சகர்களே எவ்வித பரிதாபமும் இன்றி இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றனர்.

மேலும், சிறுவயதில் திருமணம் செய்பவர்கள் வெகுவிரைவாக விவாகரத்து செய்துகொள்ளுவதாலும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதாவது பக்குவம் இல்லாத வயதில் திருமணமானவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளால் பிள்ளைகள் அநாதரவாக்கப்படுகின்றனர். இதனை சாதகமாக வைத்துக்கொள்ளும் சிலர் தமது இச்சைகளுக்கு சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெற்றோர்களின் கவனக்குறைவும் சிறுவர்கள் நாசமாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அதாவது தமது பிள்ளைகள் பாடசாலைக்கோ, உறவினர்கள் வீடுகளுக்கோ, நண்பர்களிடமோ சென்றால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என எண்ணி அசமந்தப்போக்காக இருந்து விடுவார்கள்.

ஆனால் இது போன்ற இடங்களிலேயே சிறுவர்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மாணவரை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது, சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய சித்தப்பா கைது, சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்த 60 வயது தாத்தா கைது என ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் ஏதோ ஒரு செய்தி நமது காதுக்கு எட்டுகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல் பாதிக்கப்பட்ட பிறகு மாத்திரமே அதற்கு வழிகளைத் தேடுகின்றோம்.
சிறுவர்களின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணியாக தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒன்றாக உள்ளது. கணனியோ, தொலைக்காட்சியோ, அல்லது கையடக்கத்தொலைபேசியோ இல்லாத வீடுகள் இல்லை. சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என எண்ணி பெற்றோரும் இவர்களை தனிமையாக்கி விடுகின்றனர்.

ஆனால் தனிமையாக இருந்து என்ன செய்கின்றார்கள் என்பதை யாரும் கவனித்து பார்ப்பதில்லை. உதாரணமாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகம் இல்லாதவர்களே இல்லை எனலாம். வீதியில் இரு 4,5 ஆம் ஆண்டு படிக்கும் சிறுவர்கள் கதைத்துக்கொண்டு செல்கின்றனர். ‘மச்சான் ஏன்டா நேற்று பேஸ்புக் சற்டுக்கு வரல, இன்றைக்கு ஒன்லைனுக்கு வா சட்ற் பண்ணுவோம் என்ன..” என்கின்றார்கள் .
இதை பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. தற்போதைய உலகில் தகவல் பரிமாற்றம் என்பது முக்கியம் . சிறுவர்கள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். எது நன்மை எது தீமை என அறியாது பல விடயங்களில் ஈடுபடுவர். சிலவேளை முகப்புத்தகத்தில் சிறுவர்களை காமப் பார்வையில் பார்க்கும் சிலரின் பார்வையில் சிறுவர்கள் சிக்கிவிட்டால் எப்படியாவது அவர்களின் வாழ்க்கையை அழித்து விடுவார்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் யாரையும் நம்ப முடியாமல் உள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக சம்பவங்கள் நடந்தேறிவிடுகின்றன. எனவே காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு என்பது தாய்மாரே தமது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அரணாக இருக்க முடியும்.

1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை இலங்கை அரசானது 1991 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது.

இந்தச் சமவாயம் சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை வரை முறைப்படுத்துகின்றது. இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் எனபல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் நமது நாட்டில் பூஜ்ஜியமாகவே உள்ளன.

மேலும் இந்த சமயவாயத்தின் உறுப்புரை 18 இல் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தின் அடிப்படையில் 'பிள்ளையை வளர்க்கும் முக்கிய பொறுப்பு தாய், தந்தை ஆகிய இருவரையும் சார்ந்ததாகும். அரசாங்கம் இது விடயத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்தல் வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பதில் அரசாங்கம் பெற்றோருக்குத் தகுந்த உதவி வழங்குதல் வேண்டும்" என பெற்றோர் பொறுப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்களின் பாதுகாப்பு மற்றவர்கள் கைகளில் இல்லை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டும்.

யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியென்றால் இன்றைய சிறுவர்கள் நாளை தலைவர் என்பது மறைந்து இன்றைய சிறுவர்கள் நாளை விபசாரிகளா? என்ற கேள்வி எழுகின்றது.


காரணம் இவ்வாறு சிறுவர்கள் விபசாரிகளும் விபசாரத்திற்கும் உட்படுத்தப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இத்தப்புகளை புரிபவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு இருந்தால் மேலும் மேலும் குற்றச்செயல்கள் அதிரிக்குமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அதாவது ஒரு சிறுவனின் வாழ்க்கையை அழித்தவனுக்கு 3 மாதகால சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் தான் தண்டனை. ஆனால் அழிந்த வாழ்க்கை மீண்டும் வருவதில்லை. சிறையிலிருந்து வரும் நயவஞ்சகனின் பார்வை அடுத்த சிறுவனையும் இலக்கு வைக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது.

இந்நிலையில், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கடந்த (2012-11-22 ) சபையில் தெரிவித்திருந்தார். உண்மையில் வரவேற்க கூடிய விடயம்.

இது ஏட்டு சுரக்காயாக மாத்திரம் இருந்து விடாது நடைமுறைக்கு வந்தால் நன்மையாக இருக்கும். மேலும் இக்குற்;றங்கள் புரிபவர்கள் பிணை எடுக்க முடியாத குற்றங்களாக ஆக்கப்பட வேண்டும்.

அப்போதே அடுத்த சந்ததியின் வீரிய விதைகளான சிறார்களை விளைச்சல் மிக்க சந்ததியினராக உருவாக்க முடியும்.

-எம்.டி.லூசிய
ஸ்

ad

ad