இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல!- சீமான் ஆவேசம்
இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலில் போட்டியிடுவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “இறந்த தலைவர்களுக்கு வீரவணக்கம் செய்வது என்பதே அவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்ந்த மரியாதை” என்று தெரிவித்துள்ள சீமான்,
“இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது” எனவும் கூறியுள்ளார்.
சீமான் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்து சிறப்பாக செயலாற்றி வந்த நிலையில், இன எதிரிகளின் சதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பரிதி என்கிற மதீந்திரன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் ஐயா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.