பல தேசிய தலைவர்களை உருவாக்கியது
தமிழக சட்டமன்றம்: பிரணாப் முகர்ஜி உரை
தமிழக சட்டப்பேரவை வைரவிழா இன்று சென்னை கோட்டையில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை :
’’தமிழக சட்டசபை பழம்பெருமை கொண்டது. இங்கே
பணியாற்றிய பல தலைவர்கள் தேசிய தலைவர் களாக உருவெடுத்தனர். ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், அண்ணா போன்றவர்கள் சேவையாற்றிய இடம் இது. ஜனாதிபதியாக விளங்கிய வெங்கட்ராமன், மத்திய மந்திரிகளாக இருந்து சிறப்பு பெற்ற சஞ்சீவி ரெட்டி சி.சுப்பிரமணியம் ஆகியோரும் பணியாற்றிய சிறப்பு பெற்றது இந்த சட்டமன்றம். சட்டசபையில் தீரராக விளங்கியவர் சத்தியமூர்த்தி.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்கு அண்ணா பெரும் முயற்சி மேற்கொண்டார். கருணாநிதி 5 முறை முதல்வராக இந்த சபையில் பணியாற்றினார். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் கருணாநிதி. தமிழகத்தின் தியாகிகளால் நாட்டுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக 1937-ல் விற்பனை வரி கொண்டு வந்தது தமிழக பேரவை. சத்துணவுத் திட்டத்தினை அமல்படுத்தியதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது தமிழ்நாடு. ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் இட ஒதுக்கீடு வழங்கியது தமிழக சட்டமன்றம்.
தமிழக சட்டசபை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல மக்கள் நல தீர்மானங்கள் உருவான சபை இது. பெண்கள் மேம்பட தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சிறப்பான சேவையாற்றினார். இப்போது ஜெயலலிதா சிறப்பாக செயல்படுகிறார். சிறப்பாக செயல்படும் பெண் முதல்வர்களில் ஒருவராக ஜெயலலிதா திகழ்கிறார்.
சட்டமன்ற பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற வேண்டும். விவாதத்தில் ஈடுபட வேண்டும். சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை இடையூறு செய்து முடக்கக்கூடாது. ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.’’