புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது.
கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
கனடாவைப் புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ் நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால் வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக நகைசுவைததும்ப
மரபு கவிதையா புதுக்கவிதையா என கண்டு கொள்ளமுடியாத ஒரு புதிய பாணியில் நல்ல சீரிய சொல்வலத்தொடு வடித்து பலரது பாராட்டையும் பெற்று வரும் பகீரதனை நாம் மென் மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறோம் இந்த பட்டமளிப்பை தொடர்ந்து இவர் தனது நறுக்கான சுய விமர்சன கருத்துகளை பின்வருமாறு கூறுகின்றார்
``ஒட்டாவா தமிழ்ச்சமூகத்தில் அறிவும் ஆற்றலுமிக்க முத்தமிழ் கலாமன்றத்தினர் எனக்கு செந்தமிழ் நாவலன் எனும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். புலவர் ஐயாவின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின்கையால் வழங்கப்பட்டது என் வாழ்வின் நற்பாக்கியம். எனது பரந்துபட்ட வாசிப்புக்கும், எனது பேச்சுவன்மைக்கும், எழுத்துக் கூர்மை
எனக்குமொரு விருது!
(முத்தமிழால் எனக்கொரு விருது
தமிழ்பசியால் வந்த விருந்து)
விருதுகளும் பொன்னாடைகளும் மலிந்து போய்க்கிடக்கும் இன்றைய சூழலில் எனக்கும் ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. படித்தவர்களும், அரசியல் மற்றும் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவர்களும் நிறைந்த ஒட்டாவா தமிழ்ச்சமூகத்தில் அறிவும் ஆற்றலுமிக்க முத்தமிழ் கலாமன்றத்தினர் எனக்கு செந்தமிழ் நாவலன் எனும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். புலவர் ஐயாவின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் கையால் வழங்கப்பட்டது என் வாழ்வின் நற்பாக்கியம். எனது பரந்துபட்ட வாசிப்புக்கும், எனது பேச்சுவன்மைக்கும், எழுத்துக் கூர்மைக்கும், ஒட்டாவா தமிழ்சமூகத்தோடு கலைத் தோழமை கொண்டமைக்காகவும் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.
என் மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் நான் செய்தவை மிகச்சொற்பம். நாடக நடிகனாக, இயக்குனராக, தரமான பேச்சாளனாக, சமூக நலன் விரும்பியாக நான் கலையோடு என்னை இணைத்துக் கொண்டாலும், தமிழ் சமூகத்திற்கு நான் செய்தவை மிகச்சொற்பம். செய்ய வேண்டியவை மிக அதிகம். காலச் சூறாவளியில் வேரோடு புடுங்கி வீசப்பட்ட மரமாக நாம் புலம்பெயர்ந்து கிடக்கிறோம்; ஆனாலும் அலையால் மீண்டும் மீண்டும் தூக்கி கரைக்கு வீசப்படும் சருகுபோல நம் கலை ஆர்வங்களும் தூக்கி வீசப்படுகின்றன. ஒரு தேசாந்திரியைப்போல என் கலைகளும் மனதளவில் அலைந்து திரிகின்றன. இறக்கி வைக்க இடம் தேடி அவை அவதிப்படுகின்றன. ஆனாலும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்தும் குரைத்துக் கொண்டேயிருக்கும் நாயைப்போல கலைஞர்கள் நாம் தொடர்ந்தும் குரைத்துக்கொண்டே இருக்கலாம்; குரைத்துக்கொண்டே இறக்கலாம். அறுவடையை எதிர்பார்க்காமல் விதைத்துக்கொண்டே இருக்கலாம்.
கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன். பல மேடைகள் ஞாபகம் வருகிறது. 15 வயதில் என் பக்கத்து கிராமத்து சிவராத்திரி விழாவில் கதாநாயகியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆண் இடையில் விட்டோட, அந்த வாய்ப்பு கிராமத்து எல்லைதாண்டி எனக்கு வந்தது. அது 3 மணித்தியாலய பெருநாடகம். அந்த பாராட்டுக்கள் என்னில் இப்போதும் அப்படியே புதைந்து கிடக்கின்றன. கண்ணகியாக, அரிச்சந்திரனாக……..எல்லா நினைவுகளும் பசுமையாக….கவியரங்கள் தொடங்கி………
இந்த நேரத்தில் என் கிராமத்தையும், என்மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், சக கலைஞன் மீது அவதூறு கொள்ளாமல் என்னை மேடைகளிற்கு தள்ளி விடுகின்ற நண்பர்களையும் நான் நன்றியுணர்வுகளோடு நினைத்துப் பார்க்கிறேன். என் ஆளுமை மீது நம்பிக்கை கொண்டு எனக்கு கோடு போடுகின்ற, என்னை விமர்சிக்கின்ற எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். நீங்கள் தந்த இந்த பட்டத்தை காப்பாற்றக்கூடிய அளவில் எனது பேச்சுலகமும் எழுத்துலகமும் ஆமையைப்போல மெல்ல நகர்ந்து இலக்கினை அடையும் என நம்புகிறேன்.
அன்புடன்,
அ.பகீரதன்``
இவரது படைப்பாற்றலை இங்கே கண்டு மகிழலாம்
www .nilaamuttam.blogspot .com
www .pageerathan .blogspot .com