செய்மதி தொலைபேசி வைத்திருந்த ராமச்சந்திரன் இந்தியாவில் கைது
திருச்சியில் செய்மதி தொலைபேசி வைத்திருந்த இலங்கை தமிழரை க்யூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசியின் சிம்காட் ஆய்வுக்காக பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருச்சி அடுத்த துவாக்குடி அருகே உள்ள தேனீர்பட்டியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (40). இலங்கைத் தமிழரான இவர், அதேப்பகுதியில் தோப்புடன் கூடிய வீட்டில் வசித்து வந்தார்.இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக கேரள முறைப்படியான வைத்தியத்திற்கு தமிழகம் வந்த ராமச்சந்திரன், தனது உறவினர்கள் சிலர் திருச்சியில் இருப்பதால் இங்கேயே வீடு கட்டி தங்கியுள்ளார்.அவ்வப்போது ராமச்சந்திரன் அவுஸ்திரேலியா சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட செய்மதி தொலைபேசியை ராமச்சந்திரன் பயன்படுத்தி வருவதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து க்யூ பிரிவு பொலிஸ் அதிகாரி ரங்கசாமி மற்றும் பொலிசார் நேற்று முன்தினம் இரவு தேனீர்பட்டி சென்றனர். அங்கு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் செய்மதி தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தினர். ராமச்சந்திரனை நேற்று திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். செய்மதி தொலைபேசி வைத்திருந்தாக திருச்சியில் முதன்முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.ராமச்சந்திரனிடம் கைப்பற்றப்பட்ட செய்மதி தொலைபேசியின் சிம்காட் ஆய்வுக்காக பெங்களூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து ராமச்சந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்: தேனீர்பட்டியில் அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் எந்த கையடக்கத் தொலைபேசிக்கும் சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களிடம் அவசரத்திற்கு பேசுவதற்காக இந்த செய்மதி தொலைபேசியை வைத்திருந்தாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த போனுக்காக சிம் காட் சார்ஜ் செய்யும் வசதி இங்கு இல்லை என்பதால் அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களிடம் சொல்லி ரீசார்ஜ் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் செய்மதி தொலைபேசி பயன்படுத்த தடை உள்ளது தெரியாது என்றும் கூறியுள்ளார்.செய்மதி தொலைபேசிகளை பயன்படுத்தவோ அல்லது அவற்றை வைத்திருக்கவோ, இந்தியன் டெலிகிராப் சட்டம் 1885ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கையடக்கத் தொலைபேசி கம்பெனிகளின் கீழும் இந்த செய்மதி தொலைபேசிகள் வராது. இதனால் இந்த வகை சேட்டிலைட் தொலைபேசிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவற்றிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாக திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் ராமச்சந்திரனை பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, சிறைக்கு அழைத்து செல்கின்றனர்.செய்மதி தொலைபேசி எண் 13 இலக்கங்களைக் கொண்டதாக இருக்கும். வெளியிடங்களுக்கு பேச 1 நிமிடத்திற்கு 4 டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும். நேற்றைய நிலவரப்படி ஒரு நிமிடத்திற்கு ரூ 215.24 ஆகும்
.