சனல்- 4 இன் புதிய வெளியீடு 'நோ பயர் சோன்': அடுத்த மாதம் ஐநா பேரவையில் வெளியிடப்படும்
“இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கெல்லம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சனல்- 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன.
போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையிலேயே படத்துக்கு “No Fire Zone” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குனர் கெல்லம் மெக்கரே. சனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும். போர்க்குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அங்கே நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும்" என்றார் கெல்லம் மெக்கரே.
சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பது குறித்தும் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களை உருவாக்கவும் இந்தத் திரைப்படம் வழிகோலும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.