ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளின் தூக்குக் கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ
இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒன்றரை மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம். இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மறைந்த மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா, ம.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலையை திறந்து வைத்தும், கட்சி அலுவலகத்துக்கு நடராஜன் பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மரண தண்டனை என்பது கூடாது என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தியாவுக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்சவை எதிர்த்து ம.தி.மு.க. போராட்டம் நடத்தி உலகத்தின் பார்வையை தமிழகத்திற்கு திரும்ப செய்துள்ளோம்.
தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள். நாங்கள் நடத்தும் கிளர்ச்சி போராட்டத்தை வெற்றி பெற செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்கான பிரச்சினையில் எங்களது நிலைப்பாட்டை நாங்கள் எப்போதும் மாற்ற மாட்டோம்.
தமிழக மக்களின் சுயமரியாதையை நிலை நாட்டுவதற்காக போராடுகிற ஒரே இயக்கம் ம.தி.மு.க. தான். தமிழர்களின் வாழ்வுரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது ம.தி.மு.க.தான். தேர்தலில் தோற்பது தோல்வி அல்ல. நாங்கள் போராளிகள். போராடிக் கொண்டு தான் இருப்போம் என தெரிவித்துள்ளார்.