இரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுத்து, குற்றவாளிகளை தண்டிப்பதாக ‘ஆட்சி மாற்றத்தினை’யே மையப்படுத்துகிறது என்று ஐ. நா தீர்மானம், அமெரிக்க நகர்வுகள் என்று தொடர்ச்சியாக பேசி, அமெரிக்க தீர்மானத்தினை புறக்கணிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை சென்ற ஆண்டு முதலே வைத்து வருகிறோம். கடந்த வருடம் மார்ச் 18 ஆம் தேதி மெரினாவில் நிகழ்ந்த நிகழ்வில் இந்த ஐ. நா தீர்மானத்தினை புறக்கணித்து ‘சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பினை’ முன்னிலைப்படுத்தினோம்.
அமெரிக்காவின் தீர்மானத்தினை தூக்கிப்பிடித்து அலைந்த டெசோ இன்று அதைப்பற்றி பிதற்றுகின்ற நிலையை நாங்கள் காண்கிறோம். அந்த அமெரிக்க தீர்மானத்தினை மாணவர்கள் எரிக்கும் ஒவ்வொரு புகைப்படமும் எங்களுக்கு அளப்பில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த படங்கள் எங்களுக்கு சொல்வது ஒன்று தான் , ‘ அடுத்த தலைமுறை தயாராகிவிட்டது, நாம் நம்பிக்கையோடு கைகோர்ப்போம், தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்’ என்பது... நாம் வெல்வோம் - மே பதினேழு இயக்கம்