தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !என்று வீதிக்கு வந்த ஈழத் தமிழ் மக்கள்
கடந்த 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ, நடிகர் ராதாரவி, நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ம.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.எங்கள்
நடிகர் ராதாரவி பேசுகையில்,
‘தந்தை பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் இருந்திருந்தால், ஈழத் தமிழர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. தமிழர்கள் இப்போதுதான் விழித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் உறங்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழீழ விடுதலை அடையாமல் உறங்க மாட்டோம். தனித் தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்” என்றார்.
வைகோ பேசும்போது,
தமிழீழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சிங்கள அரசுக்கு இந்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளிவைக்கும். அரசியல் கட்சிகளைக் கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசைத் தலைவணங்கவைப்பார்கள். எமக்குப் பின்னால் வரும் இளைய தலைமுறை என்னைப்போல் பேசிக்கொண்டு இருக்காது. தமிழகம் எடுக்கும் முடிவுதான் இந்திய அரசு எடுக்கும் முடிவு என்ற சூழலை மாணவர்கள் உருவாக்குவார்கள். விடியல் கண்ணுக்குத் தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் நேசிக்கும் மண்ணை வருங்கால மாணவர்கள் அமைத்துத் தருவார்கள்” என்றார்.
பழ.நெடுமாறன் பேசும்போது,
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையைத் தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையைத் தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சுதந்திரத் தமிழீழம் மலர்வதை உங்கள் கண்களால் கண்டு உங்கள் தாயகத்துக்குத் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றார்.
ஈழத்தைச் சேர்ந்த இருதய ராணி,
நான் முல்லைத் தீவைச் சேர்ந்த பெண். எனது குடும்பத்தினர் அனைவரையும் போரில் இழந்துவிட்டேன். நானும் எனது தம்பியும் வேலூர் அகதிகள் முகாமில் உள்ளோம். மாணவர்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. நாங்கள் எங்கள் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு மாணவர்கள் போராட்டத்தால் செயல்படக்கூடும். யாரும் தீக்குளித்துப் போராட வேண்டாம்” என்றார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு,
கடந்த 12-ம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார். இப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசியபோது, ”மாணவர்கள் சாதி, மதம் அரசியல் கடந்து போராடுவது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. ஒரு நாட்டின் நான்காவது தூண் ஊடகம் என்பார்கள். ஆனால் ஈழ சமூகத்தின் இரண்டாவது தூணும் ஊடகமே. மாணவர்கள் யாரும் தீக்குளித்துப் போராட வேண்டாம் என்று ஊடகங்கள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.