புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


திமுகவின் எச்சரிக்கையில் கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை இடமில்லை: கலைஞர் அறிக்கை
 

தி.மு.க. தலைவர் கலைஞர் 16.03.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-


தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென்றால், உடனே தி.மு.கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு என்று கூறுவார்கள், எழுதுவார்கள்.
அதே நேரத்தில் மத்திய அரசு ஏதாவது நல்லது செய்தால், அப்போது மட்டும் தி.மு. கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு என்பது அவர்களுக்கு வசதியாக மறந்து விடும்; அல்லது மறைத்து விடுவார்கள்.

அவர்களது தவிப்பெல்லாம், தி.மு. கழகத்தைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதுதான். இலங்கைப் பிரச்சனையிலே கூட தி.மு. கழகம் ஒரு மாநில அரசியல் கட்சி என்பதையே மறந்துவிட்டு, ஏதோ தி.மு. கழகம் மிகப்பெரிய வல்லரசு என்பதைப் போலக் கற்பித்துக் கொண்டு, இலங்கையிலே நடைபெற்ற படுகொலைகளையெல்லாம் தி.மு. கழகம் நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம் என்பதைப் போல இன்றைக்கும் திட்டமிட்டு, வேண்டுமென்றே குறை கூறுவோர் உண்டு.
 
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளைக் கண்டித்து, நம்பகத் தன்மை கொண்ட, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசே வலுவானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி; அவ்வாறு இந்திய அரசு தீர்மானத்தை முன் மொழிவதற்கு வெளிப்படையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வர வேண்டுமென்று பல நாட்களாக வலியுறுத்தி, அதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழினத்திற்கு நிறைவு தரும் எந்தவிதமான பதிலும் வராத நிலையில்; தி.மு. கழகத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், தி.மு. கழகம் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்று நேற்று அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தேன்.
 
இந்தச் செய்தி ஒரு நாளிதழைத் தவிர மற்ற ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது. இன்னொரு நாளிதழ் என்னுடைய இந்த அறிக்கையை முழுமையாக வெளியிட்டதோடு, ஆறாவது முறையாக தி.மு. கழகம் இவ்வாறு விலகல் எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றும் எழுதியுள்ளது.
அவர்கள் தி.மு. கழகத்தைக் கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதினாலும், அவர்களாலேயே கடந்த காலத்தில் அவ்வாறு விலகல் எச்சரிக்கை விடுத்த போது தமிழ்நாட்டிற்கு நன்மை ஏற்பட்டதை மறைத்திட முடியவில்லை.

உதாரணமாக, முதல் முறையாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை தனியாருக்கு மத்திய அரசு விற்க 2006-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் மத்திய அரசு முடிவு செய்த போது நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிலை நீடித்தால் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக நேரிடும் என்று அறிவித்ததாகவும், அந்த அறிவிப்பு வந்ததுமே மத்திய அரசு தன் முடிவில் இருந்து பிறகு பின் வாங்கியது என்றும்; மத்திய அமைச்சரவையிலே தி.மு. கழகம் நீடித்தது என்று எழுதியுள்ளது.

இதிலிருந்து தி.மு. கழகம் விடுத்த எச்சரிக்கையின் காரணத்தால், தமிழகத்திற்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா என்பதுதான் நம்முடைய கேள்வி. அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை இந்தியா ஆதரிக்காவிட்டால் விலகுவோம் என்று கருணாநிதி அறிவித்தார், பிறகு தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது; தி.மு.க. அமைச்சரவையிலே தொடர்ந்தது என்று அந்த நாளிதழ் எழுது கிறது. அப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்திடும் தி.மு.க. வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட பிறகு தான், தி.மு. கழகம் அமைச்சரவையிலே தொடர்ந்தது.

கூட்டணியில் அங்கம் வகிப்பதால், எந்தவொரு முக்கியமான பிரச்சனையிலும், முதலில் கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; பிறகு அழுத்தம் தருகிறோம்; தொடர்ந்து இப்படிச் செய்ததற்குப் பின்னரும், நம்பிக்கை ஒளி தோன்றவில்லையென்றால், இறுதிக் கட்ட உத்தியாக இத்தகைய முடிவை எடுத்து அறிவிக்கிறோம். இதிலே கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை. இப்படி முடிவெடுப்பது என்பது கூட்டணி அரசியலில் நடைபெறும் நிகழ்வுதான்.

தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் உகந்த வகையிலேயே தி.மு. கழகம் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கின்றது. ஆனால் மத்திய அரசிலே தி.மு. கழகம் நீடிப்பதே உறுத்துகிறதே என்ற எண்ணத்தோடு அவலை நினைத்து உரலை இடிப்பதைப் போலச் செயல்படுவோருக்கு, தி.மு.க. எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருந்தாலும், தமிழக மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad