புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2013


உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு!- மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு த.தே.பொ.க. கோரிக்கை
தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட புல்லரின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததனால், அவரது தூக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவரது கருணை மனுவை 2011-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் ஒரே கோரிக்கை தொடர்புடைய வழக்காகக் கூறி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதனால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாத்தையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த பெப்ரவரியில் நிராகரித்தார். இதையடுத்து இவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று கோரி மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இவர்களின் கோரிக்கை புல்லர் விடுத்த கோரிக்கைக்கு ஒத்து இருப்பதால், அதன் தீர்ப்பு வெளியாகும் வரை வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் தடை விதித்தது.
இந்த நிலையில், புல்லரின் மறு ஆய்வு மனுவை விசாரித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு, அவரது மறு ஆய்வு மனுவை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
புல்லரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முகாந்திரம் இல்லை என்றும், கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கால தாமதத்தை காரணம் காட்ட முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை ரத்து செய்க! தமிழக அரசுக்கு த.தே.பொ.க. கோரிக்கை!
தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ. முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு 12-04-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படு வோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத் தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது.
இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க தமிழகமே போர்க் கோலம்பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றன. இப் போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.
இச் சூழலில் 30-08-2011 அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்டணையை இரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது.
ஆனால், இவ்வழக்கில் எவ்விதத் தொடர்புமில்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம் மூவர் மரணதண்டனைகுறித்த வழக்கை தன் விருப்பமாக(suo mato) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொண்டது.
அரசமைப்புச் சட்ட விதி 139 (A) (1) க்குப் பொருந்தாதக் காரணங்களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்க்வி , முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.
கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங்புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
பெரிதும் ஒத்த தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந் நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.
இந்நிலையில் புல்லார் வழக்கில் "கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது'' என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துவிட்டது.
புல்லார் வழக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டதால் புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
இந்நிலையில் இம் மூன்றுதமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டவிதி 161-ன் படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து மாநில ஆளுனர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
30-08-2012 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் ஜெயலலிதா முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப்பதாகவும் இது அமையும் என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்புரையோ, அரசமைப்புச் சட்டவிதி 257 (1) ன் படியான இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுநரின் அதிகாரம் ஆகும்.
அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.
மன்னிப்பு வழங்கும் ஆளுநரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற்றவை ஆகும்.
எனவே, தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161 ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் துக்குத் தண்டனையை ரத்து செய்து ஆணை பிறப்பித்து தமிழ் நாட்டு மக்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad