லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த “ஈழம்’ வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி!
தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தே திமுக வெளியேறிவிட்டது. தற்போது தேமுதிகவும் திமுகவும் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியோ இன்னமும் ‘தமிழகத்தில் 40 தொகுதிகளையும்’ எங்களது கூட்டணியே வெல்லும் என்று சொல்லிக் கொண்டு தேமுதிகவுக்கு வலை விரித்துக் காத்திருக்கிறது. ஆனால் அதிமுகவோ “ஈழம்’ என்கிற வலையை விரித்து அதில் சில கட்சிகளுடனான கூட்டணியையும் உறுதி செய்திருக்கிறது. தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை, ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்களுக்குத் தடை என அடுத்தடுத்து அதிரடிகளைக் கிளப்பியிருக்கிறது அதிமுக. இப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு செவிசாய்க்கிறோம் என்ற கட்சியாக உருமாறியிருக்கிறது. அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திமுக.அதிமுக அணியில் ‘நிரந்தர’ இடம் வகிப்பதில் எப்போதுமே முனைப்பு காட்டுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன்.அதனால் அதிமுக அணியில் நிச்சயமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகியவை இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனை மட்டுமின்றி தமிழக நலன் சார்ந்த காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை ஆறு விவகாரங்களிலும் அதிமுக உறுதியோடு போராடுவது மதிமுகவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ‘சாக்கு’ சொல்வதற்கு நல்ல காரணங்களாக அமையும். பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் ‘சாதி’ அமைப்புகளை நம்பிக் கொண்டிருக்கிறது. பாமகவிலிருந்து வெளியேறிய வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமகவுக்கு பதில் கட்சியாக அதிமுக அணியில் இணைவதற்கும் அதிமுகவின் அதிரடிகளே காரணமாக சொல்லப்படலாம். அதிமுக கூட்டணி வலுவானதாக அமைய அமைய தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருகட்டத்தில் தேமுதிகவே இரண்டாக உடை’க்கப்’ படவும் சாத்தியங்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது. அதிமுக அரசு நடைமுறைப்படுத்திய ‘மின்வெட்டு’ வரலாறு காணாதது. ஆனால் அது நிறைவேற்றி வரும் ‘சென்டிமென்ட்’ செயல்பாடுகள் மின்வெட்டை மறக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். ஆக திமுக -விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஒரு அணியாக, அதிமுக அணியில் அதிருப்தி தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர சிறு கட்சிகள் ஒரு அணியாகவும் களத்துக்கு வரலாம். திமுக வேண்டாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்தால் தேமுதிக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அணி அமைக்கவும் வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்ப்பது தற்கொலைக்கு சமம் என பொதுவான கருத்து நிலவுவதால் அது ‘கை’ கழுவப்படுகிற வாய்ப்பாகவே அனைத்து கட்சிகளுக்கே இருக்கிறது! லோக்சபா தேர்தல் நெருங்கும் போது இன்னமும் ‘அரசியல் களம்’ தெளிவானதாக மாறும்
!