புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2013

13வது திருத்தத்தை இலங்கை நீக்கினால் பதிலடியாக கச்சதீவை மீளப்பெற இந்தியா உத்தேசம்!
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன் டில்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் அவ் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றாக 1987ல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கையில் என்றுமில்லாதவாறு தற்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக, கூட்டணி அரசின் கடும்போக்குடைய பங்காளிக் கட்சிகள் 13ற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதுடன், அதை நீக்குமாறு கோரும் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அரச சார்புடைய கடும்போக்குடைய சிங்கள அமைப்பினரும் "13'ற்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் "13'ஐ மேலும் பலப்படுத்த வேண்டும் என அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், அரச கூட்டணியில் பிரதான கட்சியாகத் திகழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது விடயத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிக்காமல் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.
கூட்டு அரசுக்குள் கருத்து வேறுபாடென்பது அரசியல் ஜனநாயகக் கலாசாரம் எனக் கூறி இது விடயத்திலிருந்து அரசு நழுவிச் செல்கின்றது. இதன் மூலம் "13'ல் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டும் என்ற விடயம் உறுதியாகின்றது.
அத்துடன், வடக்குத் தேர்தலுக்கு முன்னர் "13'ல் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பதற்கு சட்டமூலமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அரசு முயற்சிக்கின்றது என அறியக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு அரசமைப்பின் "13' விடயத்தில் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், "13' விடயம் சம்பந்தமாக இந்தியா தனது பூரண கவனத்தைச் செலுத்தியுள்ளது.
இதன்படி அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியூடாக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அரசமைப்பின் 13வது திருத்தத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கோ அல்லது அதை பலவீனப்படுத்துவதற்கோ இலங்கை அரசு முயலும் பட்சத்தில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையிடமிருந்து கச்சதீவை இந்தியா மீளப்பெறும் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் டில்லி உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
1974ம் ஆண்டுவரை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கச்சதீவு அதன் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்டது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி கச்சதீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
எனவே, இந்தியாவின் தலையீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 விடயத்தில் இலங்கை தலையிடுமானால், கச்சதீவை இந்தியா நிச்சயம் மீளப்பெறும் என்று அரசியல் ஆய்வாளர்களும் எதிர்வு கூறுகின்றனர்.
அதேவேளை, இலங்கைக்கு கச்சதீவை வழங்குவதற்கு எதிராக இந்தியாவின் தமிழக கட்சிகள் இன்றும் குரலெழுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad