சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் ஐ, ஜே, கே ஆகிய
3 கேலரிகள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடைவிதித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த 3 கேலரிகளையும் பயன்படுத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளை பயன்படுத்த கடந்த 10-ந்தேதி இடைக்கால தடைவிதித்தது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி அந்த 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தனர். இந்த 3 கேலரிகளுக்கும் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்ககோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 14-ந்தேதி அன்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு (சென்னை- டெல்லி) மட்டும் இந்த 3 கேலரிகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கியது. அப்போது இந்த 3 கேலரிகளையும் கோர்ட்டு அனுமதி இல்லாமல் மற்ற எந்தப் போட்டிக்கும் பயன்படுத்த மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உத்தரவாதம் அளித்தது.
இந்த நிலையில் ஐ,ஜே,கே ஆகிய 3 கேலரிகளையும் சென்னை மாநகராட்சி இன்று மீண்டும் ‘சீல்’ வைத்தது. தேனாம்பேட்டை மண்டல அதிகாரி விஜய்குமார் தலைமையிலான அதிகாரிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு சென்று அந்த 3 கேலரிகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.