புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013

தாராபுரத்தில் காதல் மனைவியை கொன்ற வாலிபர்: பூட்டிய வீட்டில் ஒரு வாரம் மறைத்தது அம்பலம்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் பானிபூரி கடை நடத்தி
வந்தார். அப்போது செல்வி (30) என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில் ரமேஷ் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் வந்தார். அங்குள்ள தீபாவளி நகரில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினார். 

கணவனும்-மனைவியும் சேர்ந்து தாராபுரம் பஸ் நிலையத்தில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தனர். ரமேஷ்-செல்வி தம்பதிக்கு கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லை. இந்த நிலையில் ரமேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார். 

செல்வி வேறு எந்த ஆணுடன் பேசினாலும் சத்தம் போடுவார். சில சமயங்களில் பொது இடம் என்று பாராமல்கூட மனைவியை அடித்து உதைப்பார். ரமேசின் சந்தேகத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

கடந்த ஒரு வாரமாக ரமேசின் வீடு பூட்டிக் கிடந்தது. கணவனும்-மனைவியும் பீகாருக்கு சென்றிருப்பார்கள் என பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்தனர். இந்த நிலையில் ரமேசின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. எலி அல்லது பூனை இறந்து கிடக்கலாம் என கருதினர். 

இதற்கிடையே ரமேஷ் தாராபுரத்தில் உள்ள தனது நண்பருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எனக்கும், செல்விக்கும் ஏற்பட்ட தகராறில் அவளை நான் கடந்த வாரம் கொலை செய்தேன். பின்னர் செல்வியின் உடலை வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டு பீகாருக்கு வந்து விட்டேன். அவளை கொலை செய்தது முதல் என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. இந்த கொலை குறித்து போலிசில் சொல்லி விடு என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். 

பதறிப்போன ரமேசின் நண்பர் தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செல்வியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது கால்கள் கருகிய நிலையில் காணப்பட்டது. 

ரமேஷ் தனது வீட்டுக்கு மின்சார கம்பத்தில் இருந்து கள்ளத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு எடுத்துள்ளார். அந்த மின்சாரத்தை செல்வியின் உடலில் பாய்ச்சி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

செல்வியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில்தான் செல்வி எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது தெரிய வரும். 

செல்வியை கொலை செய்து விட்டு தலைமறைவான ரமேசை கைது செய்ய போலீசார் பீகார் செல்ல உள்ளனர். மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் உடலை போட்டு விட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad