கஜேந்திரகுமார் எங்கே?- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் இன்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்கள் இருவரும் மழைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் இருவரும் தங்கள து வாகனங்களை வீதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நடந்துவந்து அங்கிருந்த உதவியாளரிடம் கஜேந்திரகுமார் எங்கே என அதட்டல் தொனியில் கேட்டுள்ளனர்.
அதற்கு, அவர் நெல்லியடிக்குச் சென்றுள்ளதாக அவரது உதவியாளர் கூறியிருக்கின்றார்.
இதனையடுத்து குறித்த மர்மநபர்கள் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கின்றனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்கு முன்னால் அச்சுறுத்தும் பாணியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்றைய இரண்டாவது சம்பவம் மீண்டும் அச்சுறுத்தும் பாணியிலும், கட்சியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் இடம்பெற்றிருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியிருக்கின்றார்.
மேலும் இந்தவிடயத்தில் தாம் அக்கறையுடன் இருப்பதாகவும் எந்த அச்சுறுத்தல்களுக்கும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.