நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது.
அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக்கூட்டத்துக்கு பொலிஸார் தடை விதித்தனர்.
இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது.
இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது.
ஆனால் இந்த கருத்தரங்கத்தை தொடர்ந்து இரவு பொதுக் கூட்டமும் இதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து இரவு 10.20 மணி வரை நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
மேலும் பிரிவினை வாத இயக்கமான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் யாசிம் மாலிக்கையும் அழைத்து வந்தார்.
இதனால், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில், பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான், இன்றோ அல்லது நாளையோ எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினரிடையே பரபரப்பான பேச்சு அடிபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.