புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் பலவந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றம்
இலங்கை வந்திருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரியான தமிழ்ப் பெண் ஒருவர் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
எஸ்தர் தேவகுமார் எனும் 42 வயதான குறித்த பெண் கடந்த 19ந் திகதி சுற்றுலா வீசாவில் இலங்கை வந்திருந்தார். பின்னர் 23ந் திகதி வவுனியா சென்றிருந்த அவர், நெடுங்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்பப் பெண்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இது தொடர்பான தகவல் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்பட்டிருந்தார்.
சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் குடிவரவுத்துறை அதிகாரிகள் அவரை பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்து அரச நிகழ்வில் பங்கேற்ற இந்திய பெண்மணி படையினரால் 8 மணி நேர விசாரணை!
சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதவைகளுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தொண்டு நிறுவனப் பணியாளராகக் கலந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டு, படை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார்.
பெண்களுக்கான கிராமிய பொது அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் அடங்கலாக, 35க்கும் மேற்பட்ட விதவைகள் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்வில் பிரதேச சமூக சேவை பணியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, அனுசரணை வழங்கி, பெண்களுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வளவாளர் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
இந்த வளவாளருடன், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணியாக வருகை தந்திருந்த எஸ்தர் தேவகுமார் என்ற பெண்மணியும் கலந்து கொண்டு, பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார்.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பெண்மணி ஒருவர் வருகை தந்திருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி பிரதேச படையதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குச் சென்று விசாரணை செய்துள்ளனர். விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்வென்பதைக் கண்டறிந்ததும், அவர்கள் சென்றுவிட்டனர்.
ஆயினும் நிகழ்ச்சி முடிந்து எஸ்தர் தேவகுமார் என்ற அந்தப் பெண்மணி கொழும்புக்குத் திரும்பும் போது ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினர், அவரையும், அவரை நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனப் பெண்மணியையும் தடுத்து வைத்து சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளனர்.
உல்லாசப் பயணியாக வந்த ஒருவர் இங்கு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என படையதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தாங்கள் சர்வதேச விதவைகள் தினத்தையொட்டி, அரச தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டுக்கள் நிறைந்த விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்விலேயே கலந்து கொண்டதாக அந்தப் பெண்கள் படையதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
எனினும் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவுக்கமையவே விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து அவர்கள் சென்றுவிட வேண்டும் என்றும் படையதிகாரிகள் கூறியுள்ளனர்.
உல்லாசப் பயணியாக வருகை தந்திருந்த எஸ்தர் தேவகுமார் என்ற அந்த சென்னையைச் சேர்ந்த பெண்மணி அடுத்த நாளாகிய திங்கட்கிழமை தனது பிரயாணத் திட்டத்திற்கமைய சென்னைக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
எஸ்தர் தேவகுமார் சென்னையைச் சேர்ந்த பெண்ணிலைச் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad