தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.
நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பிடியாணையின் பிரகாரமே குறித்த சந்தேநபர் நேற்று கைது செய்துசெய்யப்பட்டதாகவும், கொள்ளை இடம்பெற்ற தினமே குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாகவும் அந்த பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
மேற்படி வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் பொலிஸார் மூவர் உட்பட ஆறுபேர் நீதிமன்றத்தினால் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மேற்படி வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவனேஸ்வரன் கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை பெப்ரவரி 12 ஆம் திகதி எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர் அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளி ஏற்றிக்கொண்டுச் சென்றதுடன் பணத்தை அபகரித்துக் கொண்டு கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த இடத்தில் தங்களை விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று அவர் நீதிமன்றத்தில் விபரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.