புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2013

வாலைச்சுருட்டிக் கொள்ளத் தயாராகும் அரசாங்கம்! மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்
மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளதாக அலரி மாளிகைத்தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன் அரசியலமைப்பின் 13வது சரத்தை நீக்கி அதன் மூலம் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.
எனினும் மாகாண சபை முறையை இலங்கையில் அறிமுகப்படுத்தி இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டதுடன், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் நிலைக்கும் அரசாங்கம் இறங்கி வந்தது.
இந்நிலையில் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தில் மத்திய அரசு கைவைக்குமாயின் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று இந்தியா எச்சரிக்கை செய்திருந்த நிலையில், அதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வந்தது.
தன் பிரகாரம் தற்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு கீழே உள்ள பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகம், இடமாற்றம், போன்றவற்றை மட்டும் மேற்கொள்ளும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரமொன்றை மாகாண சபைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு மத்திய அரசின் சார்பின் நியமிக்கப்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இணக்கம் மற்றும் மத்திய அரசின் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றுடன் இணைந்தே இந்தநடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் சட்டத்தைதத் திருத்திக் கொள்ளவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
எனினும் பதவி உயர்வுகள் வழமை போன்று மத்திய அரசின் பொலிஸ் தலைமையகம் ஊடாக மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியது போன்று காட்டிக் கொண்டு, மறுபுறத்தில் அதன் கட்டுப்பாட்டை முழுமையாக தமது நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்த பொலிஸ் தலைமையகம் என்ற பெயரில் பொலிஸ் தலைமையகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மாகாணங்களுக்கான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஒன்று வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.
எவ்வாறாயினும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad