புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

,



             "எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...' ஜூன் 29- ஜூலை 02 தேதியிட்ட நம் இதழுக்கு இப்படி
nakeeranபேட்டியளித்திருந்த திவ்யாவின் காதலன் இளவரசன் இப்போது உயிரோடு இல்லை. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் ரெயில்வே டிராக்கில் முகம் சிதைந்த சடலமாக 4-ந்தேதி மாலை அவர் உடலை கண்டெடுத்துள்ளனர் போலீசார். 5-ந்தேதி திவ்யா-இளவரசன் காதல் திருமணம் பற்றிய வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாள்.

நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் வழங்கப் போகும் தீர்ப்பை கேட்கும், பார்க்கும் சக்தியை ஜூலை 1-ந்தேதியே இளவரசன் இழந்து விட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜூன் மாதம் இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளிடம் பேசிய திவ்யா, "சமீபத்தில் நடந்த சம்பவங்களால் என் மனது குழம்பிப் போய் உள்ளது. எனவே தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்கியிருக்க விரும்புகிறேன்.  இளவரசனுடன் இப்போது பேச விருப்பமில்லை.

தாயாரின் உடல்நலன் சரி யில்லை என்றதால் என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் தாயாருடன் சென் றேன்' என்று தெரிவித்தார். இதனால் திவ்யாவை தாயாருடன் தங்கிக் கொள்ள அனுமதியளித்த நீதிபதிகள், "3 வார கால அவகாசம் அளிக்கிறோம். ஜூலை 1-ந்தேதி இதுபற்றி விசாரிக் கிறோம்' என்றனர்.

சொன்னபடியே ஜூலை 1-ந்தேதி கோர்ட்டில் ஆஜரானார் திவ்யா. நீதிபதிகளின் அறையில் வைத்து விசாரிக்கும்படி இருதரப்பு வக்கீல்களும் கேட்டுக்கொள்ள அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கு 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதிகளிடம் திவ்யா சொன்னது என்ன என்பது பற்றி வழக்கறிஞர்கள் கூறும்போது, "எனக்கு அப்பாவின் இறப்பும் கலவர சம்பவங்களும் மறக்க முடியாததாக உள்ளது. அம்மாவையும், தம்பியையும் இழந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. என் காதல் திருமணத்தை அம்மா ஒருவேளை ஏற்றுக் கொண்டால் சேரலாம். அப்படி ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை. நாங்கள் சேர முடியாது' என்று திவ்யா கூறியதாக தெரிவித்தனர்.

பச்சை நிற சுரிதாரில் திவ்யாவும், அதே பச்சை நிற டி.சர்ட்டில் இளவரசனும் அன்று கோர்ட்டுக்கு வந்தி ருந்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந் நிலையில்தான் 3-ந்தேதி மறுபடியும் விசாரணை தொடங்கியது.

திவ்யாவின் தாய் தேன்மொழி தரப்பில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இதுவென்பதால், "தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெறுவதாக' திவ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இளவரசன் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள், "இளவரசன் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேறு மனுவை தாக்கல் செய்தால் விசாரிக்கலாம். இந்த ஆட்கொணர்வு மனுவில் அதை விசாரிக்க முடியாது' என்று தெரிவித்ததோடு மனு மீதான தீர்ப்பை 5-ந்தேதி வழங்குவதாக தெரிவித்தனர்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த திவ்யா, "இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. அது இனி எப்போதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அம்மாவின் முடிவுப்படி வாழத் தயாராகி விட்டேன். இளவரசனுடன் வாழத் தயார் என்று நான் சொன்னதாக சிலர் (எதிர்தரப்பினர்) தவறான தகவலை பரப்பி விட்டதால் என் தாயார், உறவினர்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்ப ட்டவளாகி நிற்கிறேன்' என்று சொல்லி 3-ந்தேதி சில வழக்கறிஞர்கள் வெளியிட்ட தகவலே தவறு என்பது போல பேட்டியில் கனல் கக்கினார். இதையெல்லாம் கேட்கக்கூடாது என்று எண்ணி தானோ என்னவோ அன்று இளவரசன் கோர்ட்டுக்கு வரவில்லை.

""திவ்யாவுக்கு அவங்க குடும்பம் முக்கியம்கறதால நான் திவ்யாவை மட்டுமில்லே, அவங்க குடும்பத்தையும் ஏத்துக்கறேன். ஆந்திரா பக்கம் ஒரு பிரைவேட் கம்பெனில 15 ஆயிரம் ரூவா சம்பளத்துல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. "ப்ளீஸ்... என் கூட வந்துடு திவ்யா' ன்னு உங்க (நக்கீரன்) மூலமா கோரிக்கை வைக்கிறேன் சார்'' என்று கலங்கிய இளவரசன் தண்டவாள இடுக்கில் தலைகுப்புற கிடக்கிறார் சடலமாக. மீண்டும் ஒரு கலவரத் தீ பற்றிக் கொள்ளாதிருக்க 144 தடையுத்தரவை போட்டுள்ளது அரசு.

இடதுபக்க வாட்டில் மட்டும் மண்டை உடைந்து திவ்யாவின் நினைவு களை தேக்கி வைத்திருந்த மூளையின் பெரும் பகுதி பிறந்த மண்ணிலேயே பரவலாக சிதறி "எதற்கோ' உரமாகியிருப்பதைப் போல ஒரு உறுத் தலை பார்ப்போர் மனதில் ஆழப் பதிய வைத் திருந்தது. இளவரசன் மட்டும் 3-ந்தேதி கோர்ட் டுக்கு வராத நிலையில் திவ்யாவின் வருகையும், அதைத் தொடர்ந்து "இனி இளவரசனுடன் வாழ மாட்டேன்' என்று  அவரளித்த பேட்டியும் 4-ந்தேதி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. 

கொஞ்சம் முன்னதாக 3-ந்தேதி இரவே காட்சி ஊடகங்களில் அதைப் பார்த்துக் கொண் டிருந்த இளவரசனின் இதயத்தை சோக இருள் கவ்விப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. உறக்கம் வராத அன்றைய இரவே கடைசி இரவாக இருக்கட்டும் என்று முடிவெடுத்தாரோ என்கிற நிலையில் 4-ந்தேதி பகல் 2 மணிக்கே இளவரசன் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இளவரசன் உடலருகே குவார்ட் டர் பிராந்தி பாட்டிலும் ஒரு திறக்கப் படாத பீர்பாட்டிலும் பாதி சாப்பிட்ட ஒரு வாழைப்பழமும் சிகரெட் பாக் கெட்டும் இருந்ததாக சொல்லப்படுகிற வேளையில் அவரின் பெற்றோர் இளங்கோவன்- கிருஷ்ணவேணியிடம் பேசினோம். ""என் மகனுக்கு குடிப்பழக்கம்ங்கறதே இல்ல. அவனை தலையில வெட்டி டிராக் ஓரமா போட்டு விட்டிருக்காங்க. தற்கொலைன்னு கதை கட்டி விடறாங்க. காலையில 9 மணிக்கு செலவுக்கு கொஞ்சம் பணம் கேட்டதால என்னோட (இளங்கோவன்) ஏ.டி.எம். கார்டை குடுத்தேன். 

வீட்டுச்செலவுக்கும் சேர்த்து 9ஆயிரம் ரூபாயா எடுத்துட்டு வாப்பான்னு சொல்லி அனுப்பினோம். இந்த மாதிரியா ஆகணும்'' என்கிறார் கதறலாக.

இளவரசனின் தாயார் கிருஷ்ணவேணி, ""நாங்க வாழவே இல்லே... எனக்கு அவர் கூட வாழவே இஷ்டமில்லேன்னு இப்ப திவ்யா சொல்லுதே... வாழாமயா அவளுக்கு அபார்ஷன் ஆச்சு. நாங்க என்ன குறையை அவளுக்கு வெச் சோம். கோர்ட்ல அவகிட்ட பேச விட்டிருந்தா இப்பிடி பேசறதுக்கு யார் காரணம்னு அங்கேயே உடைச்சி கேட்டிருப்போமே' என்று கதறியபடி இருக்கிறார்.

"திவ்யா... ப்ளீஸ் வந்துடு திவ்யா... எட்டு மாசமா உன்னை குறை இல்லாமதானே வெச்சுக்கிட்டேன்...' என்று ஓப்பன் கோர்ட்டிலேயே சத்தம் தொலைத்த தொனியில் சுமார் பத்து தடவையாவது இளவரசன் கெஞ்சிய அந்த பொழுதுகள் இந்த மரண தகவலின்போது நம் மணக்கன் முன் உறுத்தலாய் நிழலாடியது.

அக்டோபர் 14, 2012ல்தான் தமிழகத்தையே புரட்டியெடுத்த காதல் சுனாமி திருமணமாய் அமைந்து போனது இளவரசன்-திவ்யா திருமணம். இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் சாதி யக் கலவரம் வெடித்தது. 265 வீடுகள் எரிக்கப்பட் டன. 200-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படியான அடுக்கடுக்கான பின் விளைவுகளோடு இதற்கடுத்த நவம்பர் மாதம் 7-ந்தேதி திவ்யாவின் தந்தை நாக ராஜ் தற்கொலை செய்துகொள்ள, எரியும் தீயில் நெய்யை ஊற்றிய கதையாக வடமாவட் டம் முழுவதுக்குமாய் சாதி தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.

போலீசாரின் விசாரணையில், இள வரசனின் சட்டைப்பையில் 2 கடிதங்கள், அருகில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் சொல்லப்பட்டி ருந்தது. அந்த கடிதங்கள் தற்கொலைக் கான காரண கடிதமா? என்று விசாரித் தோம். 2011-ல் திவ்யா இளவரசனுக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் அவைகள். தற்கொலை கடிதமல்ல... என்று தெரிவித்த அவர்கள், "இன்ஜின் சைடில் அவர் தலை அடிபட்டிருக்கிறது. குடிபோதையில் தடுமாறி விழுந்திருக்கலாம் என்று கருதுகிறோம்' என தெரிவித்தனர். காவல்துறை இத னை தற்கொலை வழக்காக பதிவு செய்திருக்கிறது.

தந்தையின் தற்கொலை மரணம், காதல் கணவ னின் மரணம்... என அடுத்தடுத்து திவ்யா சந்தித்துக் கொண்டிருக்கும் சோகங்கள் சற்று அதிகப்படியான வைதான்... "நான் என்ன தப்பு பண்ணினேன்... என்ன தப்பு பண்ணினேன்' என்றபடி மார்பிலும், தலை யிலும் அடித்துக் கொண்டு கதறியழுது கொண்டிருக் கிறார் திவ்யா. உறவினர்கள் திவ்யாவின் கண்ணீர் கதறலை கண்டு அவருக்கு உரிய பாதுகாப்பை கொடுக்கும் எண்ணத்துடன் அருகிலிருந்து ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி என்ன கதறி என்ன பயன்?

-வடிவேல், -ந.பா.சேதுராமன்


அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்




 கவிப்பேரரசு வைரமுத்து: 

தற்கொலைக்கு தள்ளப்பட்ட கொலை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. உயிர்களை உற்பத்தி செய்வதுதான் காதலின் குணமே தவிர உயிர்களை எடுப்பது அல்ல. சில காதல் தோல்விகளுக்கு மதமும் சாதியும்  பொருளாதாரமும் மனப்பிறழ்வும் காரணமாக இருக்கலாம்.  அதையும் தாண்டி இந்த தோல்விக்கு அரசியலும் காரணமாக இருக்குமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.  பெயர் தெரியாத இளவரசன்களும் திவ்யாக்களும் ஆங்காங்கே வலியோடு வாழ்ந்து வருகிறார்கள் அல்லது  வலிதாங்கமுடியாமல் இறந்து போயிருக்கிறார்கள்.  கல்வியும் பொருளாதாரமும் காதல் முதிர்ச்சியும் கைகூடிவருகிறபோதுதான்  இதுபோன்ற சமூக அவலத்திலிருந்து நாம் விடுபடமுடியும். இந்தச் சம்பவம் நமது சமுதாயம் கடந்த நூற்றாண்டை விட்டு கடந்துவரவில்லை என்றே காட்டுகிறது. என் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘"செயற்கை மனிதன் செவ்வாய் தரையில் சிற்றில் ஆடுகையில் நம் இயற்கை மனிதர் ஜாதிசண்டையில் இடுப்பு முறிவதுபோல்... முன்னே வள்ளுவன் பின்னே பாரதி முழங்கினர் ஊருக்கு... அட இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால் இலக்கியம் ஏதுக்கு?'

பி.யு.சி.எல். சுரேஷ்:


தமிழகத்தையே கொந்தளிக்கவைத்த காதல் விவகாரம் இது. எமோஷனல் பிரஷர் ஒருபக்கம்... சோஷியல் பிரஷர் மறுபக்கம் என தவித்துக் கொண்டிருந்தார்கள்  இளவரசனும் திவ்யாவும்.  அப்படி யிருக்கும்போது... அரசாங்கம், காவல்துறை, சோஷியல் வெல்ஃபேர் இவையெல்லாம் சேர்ந்து, ".நன்றாக வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்குள்  திடீரென்று மனமுறிவு  வரக்காரணம் என்ன என்று ஆராய்ந்திருக்க வேண்டுமல்லவா?  இந்திய அரசியலைப்பு சட்டம் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்கிறது. அதன்படி, இந்த பிரச் சினையை உதாரணமாகக்கொண்டு... இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பாதுகாப்பாக வாழவைத்திருக்கலாமே?  இதை... சட்டரீதியாகவும் சாதிய ரீதியாகவும் அரசாங்கம் அணுகியதே தவிர மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் அணுகவில்லை. அதனால், அரசாங்கமும் அரசியல் கட்சிகளும்தான் இந்த மரணத்துக்கு காரணம்!

சுகிதா- ஊடகவியலாளர் :


நாடகத் திருமணம் என்று மற்றவர் களைப் பார்த்துசொன்னவர்கள்தான், நாடகத்தைத் திட்டமிட்டு நடத்தியிருக் கிறார்கள் என்பது இந்தப்  பரிதாபமான முடிவின்மூலம் தெரிய வந்துள்ளது. உடை யிலும் வெளித்தோற்றத்திலும் நாம் கடைப்பிடிக்கும் நாகரிகத்தை, சமுதாயத்தில் கடைப்பிடிக்கவில்லை என்பதையும் சாதிக் கட்டமைப்புகளை உடைப்பதற்கான வேலைகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்பதையுமே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இளவரசனுக்கு ஏற்பட்ட  இந்தக் கொடூர முடிவு என்பது சாதிக்கொடுமைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடவேண்டியதன் கட்டாயத்தையும் சாதிவெறியைத் தூண்டும் இயக்கங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியிருக்கிறது.

எவிடென்ஸ் கதிர் மனித உரிமை செயற்பாட்டாளர் :


இளவரசன்- திவ்யா காதலை நாடகத் திருமணம்னு  ஃபோக்கஸ் பண்ணத்தான்  பா.ம.க ராமதாஸும், காடுவெட்டி குருவும் இவர்களின் காதலை பிரிச்சாங்க.  ஜீன்ஸ் பேண்ட் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு வன்னியப்பெண்களை ஏமாத்துறாங்கன்னு சொன்னாங்க பாருங்க.  அவர்கள் சொன்னதுபோல "நான் ஏமாத்தல.. என்னுடைய காதல் நியாயமான உண்மையான காதல்'ங்கிறதை தன்னோட மரணத்தின்மூலமா நிரூபிச்சிருக்கான் இளவரசன். என் தாயார் சொன்னால் கணவனோடு வாழ்கிறேன்'னு சொன்ன திவ்யாவை ஊடகத்திற்கு அழைத்து  வந்து நான் அப்படி சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை என்று மறுத்து "என் கணவனோடு நான் வாழமாட்டேன்'னு திவ்யாவை சொல்லவைக்க... அரசியல்  நிர்பந்தம் என்ன? மிகப்பெரிய மன அழுத் தத்தை உண்டாக்கியிருக்காங்கன்னு தான் சொல்வேன்.  

இது சாதாரண வழக்கு அல்ல. சென்சிட்டிவான வழக்கு. பல்வேறு அர சியல்கள் பின்னப்பட்ட வழக்கு. தமிழகத்தையே சாதியால் பற்றவைத்த வழக்கு. இதை அரசாங்கமே  ஸ்பெஷல் வழக்காக எடுத்து நடத்தியிருக்க லாமே?  பா.ம.க.காரர்கள் பார்த் துக்கொள்ளட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?   மரணம் நிகழ்ந்தபிறகு 144 தடையுத்தரவு போட்டு என்ன பயன்?  இளவரசனின் மரணம் பல கேள்விகளை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது.

ad

ad