புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

முழு நாடும் சிங்கள பௌத்த நாடு என்ற ஏகாதிபத்திய கொள்கையை ஏற்று கொள்ள முடியாது - ஹெல உறுமயவுக்கு மனோ

இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை
மாற்றி, இந்நாட்டை சிங்கள பௌத்தருக்கு மாத்திரம் சொந்தமான நாடு என மாற்றி அமைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை, வெளியே இருந்து வந்தவர்கள் என்று கூறிவிட்டு, முழு நாட்டுக்கும் நீங்கள் ஏகபோக உரிமை கோருகின்றீர்கள். இது தவறானது. வௌ;வேறு காலகட்டங்களில், வௌ;வேறு பிரிவுகளாக வெளியிலிருந்து வந்த வரலாறு நம் எல்லோருக்கும் ஆங்காங்கே வரலாற்றில் இருக்கின்றது. ஆகவே வெளியேற வேண்டுமென்றால் நாம் எல்லோருமே வெளியேற வேண்டும். வேடர்களுக்கு நாட்டை கையளித்துவிட்டு நாம் எல்லோரும் வெளியேற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று பட்டம் சூட்டி விட்டு முழு நாட்டுக்கும் ஏக போக உரிமை கொண்டாடும் கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

நேற்று இரவு பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஜாதிக ஹெல உறுமய ஊடக செயலாளர் நிஷாந்த வணசிங்க, மனித உரிமை சட்டத்தரணி சந்திரபால குமாரகே, கலாநிதி சூர்யா குணசேகர ஆகியோருடன் கலந்துகொண்ட மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் சிங்கள, பௌத்த சகோதரர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருப்பதை நாம் ஒரு பிரச்சினையாக ஒருபோது கருதவில்லை. நாம் அதை பிரச்சினையாக கருதுவதாக நீங்கள் தவறாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். 

உங்களது சிங்களம் மாத்திரம் என்ற கொள்கை மறுபுறத்தில் தமிழ் மாத்திரம், முஸ்லிம் மாத்திரம் என்ற கொள்கைகளை உருவாக்கியுள்ளன. நான் இந்த சிங்களம் மாத்திரம், தமிழ் மாத்திரம், முஸ்லிம் மாத்திரம் என்ற மூன்று கொள்கைகளையும் நிராகரிக்கின்றேன். இலங்கையர் என்ற பொதுவான பயணத்துக்குள், சிங்கள மக்களையும் இணைத்து கொண்டு பயணிக்க நாம் தயார். ஆனால் சிங்கள மக்களை எம்முடன் இணைத்து கொள்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள். இதுதான் இன்று இந்த நாட்டில் பிரச்சனை.

நாடு முழுக்க மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போது, அவற்றில் பங்குபற்றிவிட்டு இன்று வடக்கில் மாகாணசபை உருவாக்கப்படும்போது அதை நீங்கள் எதிர்கின்றீர்கள். அது பிரிவினை என்ற நிசாந்த வணசிங்கவின் கருத்து படு மோசடித்தனமானது. வட மாகாணசபையை நீங்கள் எதிர்க்கும் காரணம் சிறு குழந்தைக்கும் புரிகின்றது. வடக்கில் இன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆகவே வடக்கின் மாகாணசபை ஆட்சி, தமிழர் பெரும்பான்மை ஆட்சியாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. இதை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

இந்த நாட்டின் ஏனைய பல்வேறு மாகாணசபைகளின் சிங்கள பெரும்பான்மை ஆட்சியின் கீழ் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை ஆட்சிகள், மாகாணசபைகளில் ஏற்படுவதை நீங்கள் ஏற்றுகொள்ள தயாரில்லை. இது என்ன நியாயம் ? 
இதற்கு காரணம் இந்த நாடு முழுமையாக சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தமான நாடு என நீங்கள் நினைக்கின்றீர்கள். இதை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கலாநிதி சூர்யா குணசேகர, திருகோணமலையில் சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை தட்டச்சு செய்ய முடியாமல் தான் கஷ்டப்பட்டதாகவும், தமிழர் பெரும்பான்மை ஆட்சி வடக்கில் ஏற்பட்டால், அங்கு சிங்கள மொழி பாவனையாளர்கள் கஷ்டப்படவேண்டிவரும் என சொல்கிறார். அவரை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கின்றேன். ஆனால் அவரது கருத்து மிகப்பெரிய நகைச்சுவை. மொழி பாவனையில் தமிழர்கள்தான் இந்த நாட்டில் மிகப்பெரும் நடைமுறை கஷ்டங்களை சந்தித்து வருகின்றார்கள். இதுதான் உண்மை.

திருகோணமலை மாவட்டம் ஒரு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். அங்கு தமிழ், முஸ்லிம் மக்களின் மொத்த ஜனத்தொகை, சிங்களம் பேசுபவர்களை விட அதிகம். ஆனால், அங்கு திருகோணமலை மாவட்ட செயலகம் என்ற கச்சேரி சிங்கள மொழியில், சிங்கள அதிகாரிகளைகொண்டு நடத்தப்படுகின்றது.

அதேபோல்தான் அம்பாறை மாவட்டத்திலும், தமிழ், முஸ்லிம் மொத்த ஜனத்தொகை சிங்களம் பேசுபவர்களைவிட அதிகம். ஆனால், அம்பாறை கச்சேரி சிங்கள மொழியில், சிங்கள அதிகாரிகளைகொண்டு நடத்தப்படுகின்றது. 
வடக்கு, கிழக்குக்கு வெளியே 29 பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் மொழியும் மேலதிக நிர்வாக மொழியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரகடம் வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் தலைநகர் கொழும்பில் உள்ள இரண்டு பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடக்கம். இந்த மேலதிக தமிழ் மொழி நிர்வாகம், இந்த 29 பிரதேச செயலக பிரிவுகளில் எங்கே அமுல் செய்யப்படுகின்றது ? 
யாழ்ப்பாணத்து போலிஸ் நிலையங்களிலும், சிங்கள அதிகாரிகளை கொண்டு போலிஸ் நிர்வாகம் செய்கின்றீர்கள். தமிழ் போலிஸ் அதிகாரிகளை நியமிக்க, 13ம் திருத்தத்தில் உள்ள போலிஸ் அதிகாரங்களை கோரினால், அது பிரிவினை என்கிறீர்கள். 

நாடு முழுக்க சிங்களம் படித்து, சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆட்சியின் கீழ் சத்தமும், இரத்தமும் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம் ?

ad

ad