நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்கான இணக்கத்தை வெளிவிவகார அமைச்சிடம் தெரிவித்துள்ளதாக ஹக்கீம் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திப்பின் போது நவநீதம்பிள்ளையிள் கேள்விகளுக்கு நீதியமைச்சர் என்ற வகையில் நியாயமான முறையில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளிக்கவுள்ளேன்.
சிறுபான்மை மக்கள் தொடர்பான கேள்விகளுக்கு அதற்கான தெளிவினை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன்.
நான் நீதியமைச்சர் என்ற வகையில் நீதித்துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம்.
வழக்குகள் காலதாமதமாகுவதற்கான காரணங்கள், சட்டத்துறை தொடர்பான விளக்கங்கள் என்னிடம் கோரப்படலாம்.
நீதியமைச்சர் என்ற வகையில் நான் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது.
நான் அனைத்துக்கும் தயாராகவே இருக்கின்றேன் என்றார் ஹக்கீம்.
வடக்கு கிழக்கிற்கு நவநீதம்பிள்ளை விஜயம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை நவநீதம்பிள்ளையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்லும் நவநீதம் பிள்ளை ஓகஸ்ட் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.