புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த ஐதராபாத்
கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதன்படி சென்னை சூப்பர் கிங்சின் இன்னிங்சை முரளிவிஜயும், மைக் ஹஸ்சியும் தொடங்கினர். தொடர்ந்து 2-வது முறையாக டக்-அவுட் ஆன முரளிவிஜய், ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். சிறிது நேரத்தில் ஹஸ்சி 23 ரன்களில் (21 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட பத்ரிநாத் அந்த பணியை கச்சிதமாக செய்தார்.

மறுமுனையில் ரெய்னா துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 12 ஓவர் வரை (85-2) ரன்விகிதம் சீராகத் தான் நகர்ந்தது. அதன் பிறகு தான் ரன்வேட்டையில் சூடுபிடித்தது. ஒட்டுமொத்த 20 ஒவர் கிரிக்கெட்டில் தனது 25-வது அரைசதத்தை கடந்த ரெய்னா, ஐதராபாத் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதற்கிடையே பத்ரிநாத் 13 ரன்னில் (18 பந்து) வெளியேற, டோனி களம் கண்டார்.

சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் கடந்த ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த டோனி, இந்த முறை மெகா விருந்தே படைத்து விட்டார். 18-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் திசரா பெரேராவை டோனி, கதி கலங்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் டோனி 5 சிக்சர்களை தூக்கியடித்து, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார். இதில் ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இந்த தொடரின் நீண்ட தூரம் ஓடிய சிக்சர் இது தான். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 34 ரன்கள் (5 சிக்சர், ஒரு 2 ரன், 2 வைடு) வந்தது.

இதனால் சென்னை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. அணியின் ஸ்கோர் 175 ரன்களாக உயர்ந்த போது, ரெய்னா (84 ரன், 57 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்லைக்கோடு அருகே ஸ்டெயினால் சூப்பராக கேட்ச் செய்யப்பட்டார். கடைசி ஓவரிலும் அசுரத்தனமான தாக்குதல் தொடுத்த டோனி, மேலும் இரு சிக்சர் விளாசினார். இதனால் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 ரன்களை தொட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு வயம்பாவுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. டோனி 63 ரன்களுடன் (19 பந்து) களத்தில் இருந்தார். இதில் ஒரு பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும்.

ஐதராபாத் தரப்பில் ஸ்டெயின், டுமினி நேர்த்தியாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், திசரா பெரேரா 3 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கியிருந்தார். சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் வரிசையில் பெரேரா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் ஷிகர்தவானும், பார்த்தீவ் பட்டேலும் அருமையான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் (9.2ஓவர்) சேர்த்த இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. பட்டேல் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். 35 ரன்களில் இருந்த போது எளிதான கேட்ச்சில் இருந்து தப்பித்த தவான் 48 ரன்களில் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார்.

பின்னால் வந்த பேட்ஸ்மேன்களில் டேரன் சேமி (50 ரன், 25 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கடும் சவாலாக இருந்தார். என்றாலும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர அதை தொட முடியவில்லை. ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை வீரர்களின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. பல கேட்ச்சுகளை கோட்டை விட்டதால் தான், ஐதராபாத் அணி இவ்வளவு ஸ்கோரை எடுத்து விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் டைட்டன்சை வென்றிருந்தது. தனது 3-வது ஆட்டத்தில் சென்னை அணி பிரிஸ்பேனுடன் நாளை மோதுகிறது.

*  இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை டோனி பெற்றார். இதற்கு முன்பு 2009-ம்ஆ ண்டு நியூ சவுத் வேல்சுக்கு எதிராக டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் கீரன் பொல்லார்ட் 18 பந்துகளில் அரைசதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

*  19 பந்துகளில் 63 ரன்களை திரட்டிய டோனியின் ஸ்டிரைக் ரேட் விகிதம் 331.51 ஆக இருந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் இதுவும் ஒரு வகையில் சாதனை தான்.

*  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் 500 ரன்களை கடந்தார். அவர் இதுவரை 16 ஆட்டங்களில் ஆடி 518 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 556 ரன்களுடனும், பொல்லார்ட் 521 ரன்களுடனும் முதல் இரு இடங்களை வகிக்கிறார்கள்.

ad

ad