புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்!- அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்!
மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், திணிக்கப்பட்ட தேர்தல் என்ற போதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த் தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்ல வைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல்துறை, 
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்
அன்பான தமிழ்பேசும் மக்களே!
எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் அண்மையில் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் அழுத்தமே இந்த வடமாகாணசபைத் தேர்தல்.
மாகாணசபை முறைமை ஒருபோதும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட அமையாது என்பதில் தமிழ்த்தேசியத்தில் ஆழமான பற்றுக்கொண்டோர் அனைவரும் தெளிவாகவே உள்ளனர். இருந்தபோதும் எமது மக்கள் விரும்பாத ஒரு தேர்தல் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குமுதவாத ஓர் அரைகுறைத் தீர்வுமுறையான மாகாணசபையைக் கைப்பற்றுவதன்மூலம் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பெரிதாக எதையும் பெற்றுவிடப் போவதில்லை. ஆனாலும் திணிக்கப்பட்ட தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் எமது தமிழினம் உள்ளது.
இத்தேர்தல் முடிவு தமிழரின் உரிமைப் போராட்டத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது என்ற கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் இருக்கின்றபோது நிலைமை படிப்படியாக மாற்றமடைந்து வருவதை உணர முடிகின்றது. இத்தேர்தல் பெறுபேறுகள் தமக்குச் சாதகமாக வருமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்மக்கள் தூக்கியெறிந்து விட்டார்கள் என்ற பரப்புரையை முடுக்கிவிட அரசு தீவிரமாக முயல்கின்றது. எப்பாடுபட்டாவது தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான சக்திகளைத் தோற்கடித்து தனது பரப்புரையை உலகமட்டத்தில் விரிவாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றது. அதற்காக முடிந்தவரை முயன்றுகொண்டுள்ளது.
இந்தத் தருணத்தில் தமிழ்மக்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டியது வரலாற்றுக்கடமை. எமது விருப்பமின்றி எம்மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலைச் சரியான முறையில் எதிர்கொண்டு எதிரியின் கபட நோக்கத்தை முறியடிக்க வேண்டிய கடப்பாடு தமிழர் எல்லோருக்குமுள்ளது.
எமது இனம் விரும்பாத வகையில் எம்மீது ஆயுத வன்முறை திணிக்கப்பட்டபோது தவிர்க்க முடியாமலேயே நாமும் ஆயுதமேந்திப் போராடினோம். இன்று சிறிலங்கா அரசானது எம்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதியமுறையில் அரசியல் பொறிகளை வைத்து வருகின்றது. இதிலொன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல். இதையும் தேர்தல் வழியிலேயே முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் எமது மக்கள் இருக்கின்றார்கள்.
எனவே, மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், எமது விருப்பின்றி திணிக்கப்பட்ட தேர்தல் என்றபோதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த்தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்லவைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை, மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாயிருந்து தாயகக்கோட்பாட்டில் உறுதியாக நின்று பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான மக்களே!
“போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் என்றும் மாறாது’ என்ற எமது தேசியத் தலைவரின் எண்ணத்துக்கமைய இன்றைய காலச்சூழலில் எமது அமைப்பானது உலக ஒழுங்கிற்கு ஒத்திசைவான ஒரு போராட்டப் பயணத்தை மேற்கொள்கின்றது. அந்த வகையில் எமது அமைப்பின் அரசியல்துறையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கான பணியை புதிய புறச்சூழலுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லும்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய தியாகி திலீபனின் நினைவு நாட்களில் நடைபெறும் இந்த மாகாணசபைத் தேர்தல் பொறியை மக்களின் துணையுடன் வென்றெடுப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.அன்புமாறன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

ad

ad