வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் வடக்கில் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும்!- சுனந்த தேசப்பிரிய
வட மாகாண சபை தேர்தலில் வாக்குகள் கொள்ளை இடம்பெறாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இப்போது வெற்றி பெறும் என்பதை காணக்கூடியதாகவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் மனித வளத்தை பெருமளவில் நாசப்படுத்தி முடிவுக்கு கொண்டு வந்த யுத்தத்தால் தமிழ்ப் பிரச்சினையை நிரந்தரமாக ஒழித்துவிட்டதாக கூக்குரலிடுவது, வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கு செல்வதன் மூலம் பொய்யாக்கப்பட்டு விடும்.
இலங்கையின் முக்கிய இரு கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளைப் போலல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலும் சவால் ஒன்றை முன்வைத்துள்ளது.
அந்த வேட்பாளர் பட்டியலில் வைத்தியர்கள், கல்விப் பணிப்பாளர்கள், சட்டத்தரணிகள், பட்டதாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த வார ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது நோக்கங்கள் மற்றும் வேலைத் திட்டங்களை தெளிவுபடுத்தும் நீண்ட தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டது.
மாகாண சபைத் தேர்தல்களுக்காக எந்தவொரு கட்சியும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவில்லை. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் இனத்தின் கோரிக்கைகள் முறையாக முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடிப்படை விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.
- 1949 ஆம் ஆண்டு மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது முதல் இன்று வரை இந்நாட்டு தமிழ் மக்கள் முகம் கொடுத்த மாறுபட்ட கவனிப்பு,
- 1972 மற்றும்1978 அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது அதில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டமை,
- அரசியல் தீர்வுக்காக தமிழ் அரசியல் வழங்கிய இணக்கப்பாடுகளை 1959ம் ஆண்டிலும் 1966ம் ஆண்டிலும் பக்கச் சார்பாக சிங்கள அரசிய லால் புறக்கணிக்கப்பட்டமை,
- 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள்,
- சுதந்திரத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொண்டமை,
- யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவ ஆதரவுடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவது
ஆகியன விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் வேலைத்திட்டமாக சமஷ்டி முறையை முன்வைத்துள்ளது. அதில் வடக்கு கிழக்கை ஒன்றிணைந்த மாகாணமாக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் இணங்கினாலும் இணங்காவிட்டாலும் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவும் தமது கருத்துக்களை முன்வைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமை உண்டு. இலங்கையில் தனி நாடு அதாவது பிரிவினைவாதம் மாத்திரமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் என்னவென்றால் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைகள் மற்றும் அதன் பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதேயாகும்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணையின் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இருந்தும் யுத்த குற்றங்கள் என்ற வார்த்தையை பாவிக்காமலிருப்பதுடன் யுத்த காலத்தில் குற்றங்கள் தொடர்பாக தண்டனை வழங்குவதற்குப் பதிலாக உண்மையை ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்த சர்வதேச ஆதரவு அத்தியாவசியமெனவும் தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைப்பது அதேபோல உண்மையை தெரிந்து கொள்வது மற்றும் நஷ்டஈடு வழங்கும் ஆலோசனையையே முன்வைத்துள்ளது.
அரசாங்கம் முகம் கொடுக்கவுள்ள ஜீரணிக்க முடியாத இந்த சவாலை அதாவது தமக்கு அடிபணியாத அரசியல் அதிகார கேந்திரம் இலங்கைக்குள் எழுச்சி பெறுவதற்கு இன்னும் ஒருவார காலமே இருக்கின்றது.
அடக்குமுறை மூலம் அந்த மாகாண சபையை கீழ்ப்படியச் செய்ய தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகள் இடமளிக்கப் போவதுமில்லை. மறுபுறம் தமிழ் அரசியல் அதிகாரத்துடன் இணைந்து இணக்கப்பாட்டுடன் செயற்பட அரசின் அரசியல் கருத்துக்கள் இடமளிக்கப் போவதுமில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பாக கடந்த நான்கு ஆண்டு காலமாக அரசுக்கு மூன்று தந்திரோபாயங்கள் இருந்தன.
தமிழ் மக்களின் இன உணர்வு மற்றும் கோரிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் அடிமைப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது ஒரு பக்கமாகும். மறுபக்கம் அடக்குமுறை மற்றும் யுத்த சூழலை வைத்திருப்பதன் மூலம் தமிழ் சமூகத்தை விரக்தியுறச் செய்து அதன் மூலம் உரிமைகளுக்காக ஒன்றிணைவதை தடுப்பதுமாகும்.
இன்றைய நிலையில் பார்க்கும் போது இந்த தந்திரோபாயங்கள் வெடித்துச் சிதறும் சூழலே உருவாகியுள்ளது.
மறுபுறம் அரசாங்க ஆட்சியை புனிதப்படுத்தும் தர்க்கமாக அமைந்தது. தேர்தல்களில் வெற்றிபெற்று பொது மக்களின் அங்கீகாரத்துடன் ஆட்சி புரிகின்றோம் என்பதாகும். எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி மனப்பான்மை காரணமாக தெற்கில் சிங்கள மக்கள் ராஜபக்சவுக்கு அரசியல் அதிகாரத்தை தட்டில் வைத்து வழங்கினர். இருந்தும் இப்போது வடக்கு தமிழ் மக்கள் வேறொரு செய்தியை வழங்கக் காத்திருக்கின்றனர்.
அதாவது அரசின் ஆட்சிக்கு தமிழ் மக்களின் அங்கீகாரம் இல்லை என்பதே அச் செய்தியாகும். சிங்கள தெற்குப் பகுதியில் பெறும் அரசியல் வெற்றி தமது அரசியல் அதிகாரத்தின் புனிதம் தொடர்பான சான்றிதழாக முன்வைக்கும் ராஜபக்ச ஆட்சி வடக்கில் பெறப்போகும் தோல்வியை தமது அரசியலுக்கு அங்கு அங்கீகாரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுமா? அதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உலகத்தவர்கள் இலங்கையை இந்த விதத்தில் தான் பார்ப்பார்கள்.
தேர்தல் நடைபெறும் காலப் பகுதி சமூகமொன்றின் ஜனநாயகத்துகான சந்தர்ப்பத்தைப் பரவலாக்கும். பொது மக்களை அரசியல் விவாதங்களுக்கு தூண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் கருத்துக்கள் வெளிப்படுவதை தடுப்பது சிரமமான விடயமாகும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தூக்கம் கலையாத கும்பகர்ணனைப் போல் இருக்கும் காரணத்தால் மத்திய அல்லது வடமேல் மாகாணங்களில் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாதது துரதிஷ்டவசமானதாகும்.
ஆங்காங்கே சில இடங்களில் இந்த சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்வதை மட்டும் காணக் கூடியதாகவுள்ளது. இப்படியிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வடமாகாண தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர் வை ஏற்பத்தும் வகையில் இத் தேர்தலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இச் சந்தர்ப்பத்தில் நாம் நாடு என்ற ரீதியில் ஒரு மாற்றத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். மீண்டுமொரு முறை தமிழர் பிரச்சினை எமது அரசியல் மேடைகளில் உரத்த குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அது போன்றதொன்று இல்லை என்றோ அல்லது அது வெறும் தமிழ், சிங்கள மொழிகளை கற்பிப்பது தொடர்பான பிரச்சினை என்றோ கூறி இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாது.
நாம் இந்த உண்மையான பிரச்சினைக்கு உண்மையாக தீர்வு காணவேண்டும். வாக்குச் சீட்டுகள் மூலம் தமிழ் மக்கள் இச் செய்தியை 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வழங்கியதை நாம் அறிவோம்.
ராஜபக்ச ஆட்சி அதற்கு தீர்வு வழங்குவதை விடுத்து அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கவும் அச்சுறுத் தல்களை மேற்கொள்வதிலுமே காலத்தை கடத்துகின்றது. இருந்தும் வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் இது போன்ற அச்சுறுத்தல்களும் 13வது திருத்தத்தை ஒழிப்பதும் இயலாத காரியமாகிவிடும்.
இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எதிர்வரும் காலம் தீர்க்கமானதாக விருப்பதுடன் எதிர்காலம் இது தொடர்பில் எவ்வாறு அமையுமென எதிர்வு கூற முடி யாதவாறு காணப்படுகின்றது.