புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தமிழ் மக்கள் முழு அளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கிலே நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வட மாகாண சபைக்கான தேர்தலில் அங்கு வாழும் சகல தமிழ் மக்களும் தமிழ் தேசிய உணர்வுடனும் அரசியல் சாணக்கியத்துடனும் வாக்களிப்பில் முழு அளவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்வதுடன், தாயகம் தேசியம் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகளை நெறிப்படுத் தியும் வழிப்படுத்தியும் செல்வதற்கு பற்றுறுதியுடன் செயற்படுமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனரிடம் முழு அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மாகாணசபை அரசாங்கமானது வெறுமனே மத்திய அரசின் ஒரு முகாமைத்துவ ஏற்பாடே அன்றி அதிகார பகிர்வுக்கான ஒரு கட்டமைப்பு அல்ல என்றும் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அபிலாசைகளின் அடிப்படை விடயங்களைக் கூட பூர்த்தி செய்ய முடியாதது என்றும் தமிழ் மக்களால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுதே உடனடியாக நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் வட மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு நிர்வாக அலகாகவோ அன்றி நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, புனரமைப்பு, புனர்நிர்மாணம் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஒரு சாதனமாகவோ அமையப் போவதில்லை என்பது கசப்பான உண்மையாக இருக்கின்றபோதிலும், தேர்தல் நாளை நடைபெறும் என்ற யதார்த்தமான ஒரு அரசியல் நிலைமையினை புத்திசாதுரியமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள் தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
அமையவிருக்கும் மாகாண சபையானது இலங்கை அரசாங்கத்திடமோ அன்றி தமிழ் தேசிய விரோத சக்திகளிடமோ செல்வது தமிழ் மக்களின் அரசியல் நிலைமையினயும் அவர்களது எதிர்காலத்தினையும் மேலும் மோசமான ஒரு சூழ்நிலைக்குள் இட்டுச் செல்லும் ஒரு பெரும் ஆபத்தினை கொண்டிருக்கின்றது.
இந்த ஆபத்தினை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தினை சர்வதேசஅரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்வதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாளைய தேர்தலில் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டிய வரலாற்று கடமையினை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் தேசிய உணர்வாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் இனம் கண்டு வெற்றி பெற செய்வதன் மூலம் தமிழ் தேசிய சக்திகளை நெறிப்படுத்தி வழிநடத்தி செல்ல முடிவதுடன் தமிழ் தேசிய விடுதலை நெருப்பை அணையாது பாதுகாக்கவும் முடியும்.
எத்தனை அச்சுறுத்தல்களும் வன்செயல்களும் தாயக மக்களின் தேசப் பற்றினைக் குலைத்து விட முடியாதென்பதனை உலகுக்கு உணர்த்துவோம். நீதிக்கும் உரிமைக்குமான பயணம் தொடரட்டும்!

ad

ad