தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்புள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவ தேரரினால் அப்பகுதியிலுள்ள மக்கள் இன்று வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேற வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அம்மன் கோவிலைச் சுற்றிவர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கோவில் முன்னாலிருந்த மரங்களும் அகற்றப்பட்டுள்ளன.
அண்மையில் அம்மன் சிலை தகர்க்கப்பட்ட போது நேரடி விஜயத்தினை மேற்கொண்ட பிரதமரும் மத விவகாரங்களுக்கான அமைச்சருமான டி.எம்.ஜயரத்ன அம்மன் கோவில் அவ்விடத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு மாற்றிடத்தில் கோவில் நிர்மாணித்து வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
பிரதமரின் உத்தரவினையும் மீறி பௌத்த தேரர் கோவிலை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கோவிலுக்குப் பொறுப்பானவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கும் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.