இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து முரண்டு பிடிப்பு
நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 68 ஆவது அமர்வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின் போது இலங்கை விவகாரம் குறித்த தனது அபிப்பிராயங்களை கனடா ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை பேணப்படும் விடயத்தில் முன்னேற்றமெதுவும் காணப்படாத சங்கடமான நிலை மற்றும் மாலைதீவில் காணப்பட்டு வரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவென அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பமொன்றாகவே இச்சந்திப்பு அமைந்துள்ளது.
பொதுநலவாய அமைப்பின் மூலாதாரமாக விளங்கும் விழுமியங்கள் மற்றும் குறிக்கோள்களை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டு வருவது குறித்து பொதுநலவாய அமைப்பு அதிகூடிய ஈடுபாடு காட்ட வேண்டுமென கனடா திரும்பத் திரும்ப அறைகூவல் விடுத்த வண்ணமேயுள்ளது.
இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவிக்கையில்,
இலங்கையில் பாரதூரமான முறையில் இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தாமை குறித்த எமது விசனங்கள், தமிழ் சமூகத்தினருடனான நல்லிணக்க செயற்பாடின்மை, உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற காலம் தொட்டு இன்றுவரை இடம்பெற்றுள்ள விரும்பத்தகாத நிகழ்வுகள் உள்ளிட்ட மனித உரிமைகள் மீறப்பட்டு வரும் விவகாரம் குறித்து இன்று மீண்டும் நான் உரத்த தொனியில் தெட்டத் தெளிவுற எடுத்துரைத்தேன்.
பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெளிவான முறையில் தெரிவித்துள்ளவாறு இந்த விவகாரம் குறித்த எமது விசனங்களை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்தாத வகையில் செயற்பட வேண்டுமென்றே நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் இன்று வரையிலும் உண்மையான முன்னேற்றமெதுவும் காணப்படாமை ஆகியன நிலவாத நிலையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் முழுமையான அளவில் பங்கேற்பதென்பது கனேடிய அரசுக்கு கடினமானதாகவே இருக்கப் போகின்றமை துரதிர்ஷ்டவசமானதே எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மாலைதீவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிப்பதில் காணப்பட்டு வரும் தாமதம் எமக்கு மிதமிஞ்சிய கவலையை ஏற்படுத்தி வருவதுடன் இந்த விவகாரத்தை உடனடியாக கையாளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் நான் பொதுநலவாய அமைப்பில் உள்ள எனது சகாக்களுக்கு அஞ்சல் செய்துள்ளேன்.
மாலைதீவு மக்களின் ஜனநாயக மத்தியத்துவம் சார்ந்த விருப்புக்கள் செவிசாய்க்கப்பட வேண்டுவதுடன் இத்தகைய தேர்தல் குறித்த செயற்கிரமத்தை மேலும் தாமதப்படுத்தாத வகையில் மேற்கொள்ளுமாறும் நாம் நீதித்துறை அதிகாரிகளுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்’’ ’ எனவும் குறிப்பிட்டார்.