கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவே வேண்டும் : ஐ.தே.க.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோகமான ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளமையின் காரணமாக தேசிய பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட எந்த விடயமானாலும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்து பேச்சு நடத்தியே ஆகவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தாவிடின் அது வடக்கு மக்களின் ஆணையை புறக்கணிப்பதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்குத் தேர்தலில் வெளிவந்துள்ள முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரதேச ரீதியான அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறுவது நியாயமானதாகும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வடக்குத் தமிழ் மக்கள் எம்முடனேயே இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.