புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2013

வட மாகாண ஆளுநர் சந்திரசிறியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனந்தி சசிதரன் உட்பட மூன்று பேர் வெளிநடப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வட மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்த போது ஆளுநர் சந்திரசிறி
உரையாற்றினார்.
இதனை புறக்கணித்த மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்த வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தானும் மேலும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாக அனந்தி சசிதரன் கூறினார்.
வடக்கில் சந்திரசிறி இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்த போது வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி அவதிகள் தொடர்பில் மூன்று உறுப்பினர்களும் தெளிவான செய்தியை அனுப்ப விரும்பினோம் என்றார்.
மாகாண சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்னர் அனந்தி சசிதரன் அதற்கான காரணங்களை விளக்கி உரையாற்றினார்.
பெண் என்ற முறையில் யுத்தத்தின் போது வடக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கு பிராந்தியத்திற்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் நன்னோக்கதிற்காக செயலாற்றுவது வடமாகாண சபையின் கடமை!- ஆளுநர் உரை!
வடமாகாண மக்களின் நன்னோக்கதிற்காகவும் எதிர்கால சுபீட்சத்திற்காகவும் விடாமுயற்சியுடன் நேர்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான அபிவிருத்தி கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். 
வடக்கு மாகாண சபையின் முதலாவது பேரவையின் இரண்டாவது கூட்ட தொடர் அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கைதடியில் உள்ள வட மாகண சபை கட்டடத்தில் நடைபெற்றது.
இவ் அமர்வுக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநருக்கும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கும் முன்னதாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் வடக்கு மாகாண சபையின் இரண்டாவது கூட்ட தொடருக்கான அமர்வு இடம்பெற்றது. அதில் ஆளுநர் தனது முதன்மை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
வட மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் பொறுப்புக்களை சகல மக்களின் நன்மைகளுக்காக முழுமையாக செயற்படுத்துவார்கள்.
வடமாகாண அபிவிருத்தியில் ஈடுபாட்டுடன் தங்களின் பங்களிப்பை செய்வார்கள். மத்திய அரசுடன் இணைந்து நன்னோக்குடன் செயலாற்றுவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென்பது எனது திடமான நம்பிக்கை ஆகும்.
இந்த வகையில் வடமாகாண மக்களின் நன்னோக்கதிற்காகவும் எதிர்கால சுபீட்சத்திற்காகவும் விடாமுயற்சியுடன் நேர்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான அபிவிருத்தி கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும்.
மாகாண சபைக்கான தந்திரோபாயத் திட்டமிடலை உருவாக்கி மாகாண நோக்கங்களை அடைவதனூடாக தேசிய இலக்குகளை அடைந்து இலங்கையின் இறைமைக்கும் ஒற்றுமைக்கும் உந்து சக்தியாக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.
எதிர்காலத்தில் விரைவாக ஆசியாவின் ஆச்சரியம் எனும் இலக்கினை எம் தாய் நாடு அடைவதற்கு மாகாண அடைவுகள் வழிவகுக்கும்.
அந்த வகையில் அந்த தந்திரோபாயத் திட்டமிடல் மூலம் துரித வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மக்கள் அனுபவிக்கும் வண்ணம் மாகாண சபையானது செயற்பட வேண்டும் என்பது எனது பேரவாவாகும் என தெரிவித்தார்.
அதேவேளை ஆளுநர் முதன்மை உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் சு.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

ad

ad