விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடைவிதித்துள்ளது. நாளை மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள், சிறிலங்காவிலும், உலகின் ஏனைய பலநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம்.
சிறிலங்காவில், பொதுமக்களுக்கு எதிராகவும், பொது நிறுவனங்கள், இலக்குகள் மீதும் விடுதலைப் புலிகள், பெரும் எண்ணிக்கையான நாசகாரத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை அவர்கள் இலக்கு வைத்திருந்தனர்.
அவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளால் பத்தாண்டுக்கணக்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவுக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதோ, பரப்புரை செய்வதோ, தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தீவிரவாதிகளை நினைவுகூருவதோ, புகழ்பாடுவதோ, சட்டவிராதமானது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் நாளை மாவீரர்களை நினைவு கூருவதைத் தடுப்பதற்கே, சிறிலங்கா இராணுவம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |