இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேலதிக முன்னேற்றத்தை காணத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க ஊக்குவிக்கப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரம் சிரேஷ்ட அமைச்சரான பரோனெஸ் வார்ஸி பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொண்டமை சரியானது எனத் தெரிவித்தார். பிரதமர் அவ்வாறு சென்றதன் மூலம் இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பில் கவனயீர்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன் 1948ஆம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வடபகுதிக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டு தலைவராகவும் அவர் உள்ளார் என பரோனெஸ் வார்ஸி தெரிவித்தார்.
அவரது தீர்மானம் ஊடகவியலாளர்களுக்கு அவ்விடத்தை சென்றடைவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளது. இல்லையெனில் அவர்கள் அங்கு செல்வது சாத்தியமற்றதாகியிருக்கும். அத்துடன் உள்ளூர் மக்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சர்வதேச ரீதியிலான குரல் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
பிரதமர் தனது கண்ணோட்டங்களில் துணிகரமாகவும் முடிவாகவும் உள்ளார். அவர் ஜனாதிபதியுடன் (இலங்கை ஜனாதிபதியுடன்) மேற்கொண்ட வெளிப்படையான கடுமையான சந்திப்பில் அவர் போர் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான ஒழிவு மறைவில்லாத சுயாதீன விசாரணை உள்ளடங்கலாக ஒரு தொகை விடயங்களில் மேலும் முன்னேற்றம் காண்பதற்கு இலங்கைக்குள்ள தேவைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் பிரித்தானியா சர்வதேச விசாரணையொன்றுக்கு ஆதரவளிக்கும் என பரோனெஸ் வார்ஸி தெரிவித்தார்.
இராணுவத்தினரை வெளியேற்றல், கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் ஆணையகத்தின் சிபார்சுகளை சரியான முறையில் அமுல்படுத்தல் உள்ளடங்கலாக வடக்கிற்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்று தொடர்பிலும் மேற்படி பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கையால் மட்டுமல்லாது பொதுநலவாய சாசன கொள்கைகளுக்கு அமைவான ஏனைய பொதுநலவாய நாடுகளாலும் மேற்படி மேலதிக தேவைப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.
இந்நிலையில் பிரித்தானிய பாராளுமன்ற பொது சபையில் உரையாற்றிய அந்நாட்டு அமைச்சர் மைக்கோல் பால்லொன் விபரிக்கையில், இலங்கைக்கான ஆயுதங்கள் ஏற்றுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தேசிய விதிகளுக்கு அமைவாக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானம் உபகரணங்கள் விதிகளுக்கமைவாக பயன்படுத்தப்படவுள்ளதா என்பதுடன் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த இராணுவ மோதல்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் வர்த்தக கடல் கொள்ளைகளுக்கு எதிரான பணியை பொறுப்பேற்றுள்ள கடல்சார் பாதுகாப்பு கம்பனிகளின் பயன்பாடுக்காக ஆயுதங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் ஒரு தொகை அனுமதிப்பத்திரங்களை பிரித்தானியா வழங்கியுள்ளதால் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதிகள் அண்மையில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளானது சர்வதேச வர்த்தகத்துக்கும் பாதுகாப்புக்கும் அவசியமானதாகும். மேற்படி ஆயுதங்கள் இலங்கையில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்குமா, மேற்படி கம்பனிகள் தனிப்பட்ட பாதுகாப்பு சேவை வழங்குனர்களுக்கான சர்வதேச உடன்படிக்கையில் முழுமையாக கைச்சாத்திட்டுள்ளனவா என்பன மேற்படி விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீல னைகளின்போது கவனத்திற் கொள்ள ப்படுகின்றன.
இந்த அனுமதிப்பத்திரங்கள் அனை த்தும் கடற்கொள்ளைக்கு எதிரான பணி களுக்கானதாகும். அவை இலங்கை அரசா ங்கத்துக்கு விநியோகிக்கப்படவில்லை என மைக்கோல் பல்லொன் கூறினார்.