புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமை தொடர்பான தமது முன்னேற்றங்களை ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு அறிவித்துவந்துள்ளது. இம் முறையும் அதனை முன்வைக்கவுள்ளது.
அதேவேளை மனித உரிமை தொடர்பில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடினும் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதி தினமான இன்று, மாநாட்டின் முக்கிய விடயங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதனையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட செய்தியாளர் மாநாடொன்றை நிகழ்த்தினார்.
உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மனித உரிமை, மற்றும் இலங்கைக்கு எதிராக சில தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் சமரசிங்க;
மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் நாம் மிகவும் பொறுப்புடனும் அதற்கு முக்கியமளித்தும் செயற்பட்டு வருகிறோம். இது தொடர்பில் எந்த வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை.
நாம் எதனையும் வெளிப்படையாகவே மேற்கொள்கின்றோம். மனித உரிமை தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளோம். தொடர்ந்தும் எதிர்காலத்தில் அதனை காத்திரமாக முன்னெடுப்போம். இலங்கை எந்த நாட்டினதும் காலனித்துவ நாடு அல்ல. சுதந்திரமான ஜனநாயக நாடாகும். எமக்கென அரசியலமைப்பு உள்ளது. எமது நாட்டிற்கே உரித்தான வேலைத்திட் டங்கள் எம்மிடம் உள்ளன. இந்த நிலையில் எமக்கு காலக்கெடு அல்லது சட்ட திட்டங்களைப் போட எவருக்கும் முடியாது.
எம்மிடம் காத்திரமான தேசிய ஒழுங்கமைப்புக்கள் உள்ளன. அதற்கான சிறந்த செயற்திட்டங்களும் உள்ளன. நாம் அவற்றை ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கு முன்வைத்தும் உள்ளோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றோம் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்படுவது இது முதன் முறையல்ல. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் அவற்றுக்குப் பதிலளித்துள்ளோம் எதிர்காலத்திலும் இது தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா இலங்கைக்கு வழங்கவுள்ள உதவிகள் தொடர்பில் அந்நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மஹிந்த சமரசிங்க;
தென்னாபிரிக்கா மிகுந்த அனுபவங்களைக் கொண்ட நாடு இரு நாடுகளுக்கிடையிலும் நாம் அனுபவங்களைப் பகிர்ந்து செயற்படுவோம். எமக்கென ஒரு பொறிமுறை உள்ளது. அதற்கு மேலதிகமாக வெளிநாடுகளின் அனுபவங்களையும் நாம் தேவைப்படும் போது பெற்று செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.

ad

ad