கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இதன்போது சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு- கல்முனை மாநகரசபையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவை மேற்கொண்டுள்ளன.
இந்த வரவேற்பு மற்றும் பதவியேற்பு வைபவங்களைத் தொடர்ந்து நாளை மாலை கல்முனைக்குடியில் பொதுக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பொதுக் கூட்டத்தில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கல்முனை மாநகர சபை மேயராக இருந்த கலாநிதி சிராஸ் மீராசாகிப் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பதவிவிலகியதையடுத்தே குறித்த பதவி சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.