மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது.
பிரேம்சிங் சவுகான், சுந்தர் பாயின் மகனாக 1959 மார்ச் 5ல் பிறந்தவர் சிவராஜ்சிங் சவுகான். இளநிலை மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பை தத்துவ இயல் பாடத்தில் முடித்தவர். அரசியல் பணிகளில் ஈடுபடும்முன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். பாஜக இளைஞர் அணியில் தீவிர பணியாற்றிய இவர் 1990ல் புத்னி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1991, 1996 உள்பட 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் 2005 மற்றும் 2009 தேர்தல்கள் மூலம் மத்தியப்பிரதேச மாநில முதல் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
2006ல் பெண் சிசு கொலையை தடுப்பதற்கான திட்டம், 2007ல் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்.
மத்தியப் பிரதேசத்தில் பீகாரிகளுக்கு வேலையில்லை என்றதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.